தமிழ்த் திரையுலகில் அண்மைய சில தினங்களாக அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அனைத்துக்கும் வித்திட்ட பெருமை கொரோனா கிருமியையே சாரும்.
ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் புதுப்படங்களின் வெளியீடு தள்ளிப் போயுள்ளது. வட்டிக்குப் பணம் வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் படத்தை உரிய நேரத்தில் வெளியிடாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனப் புலம்புகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் சிறு பட்ஜெட்டில் தயாரான படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிட அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் இணையம் வழி (OTT) வெளியீடு காண தயாராகிறது.
எனவே நேரடியாக இணையத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், சத்தமின்றி 'ஓடிடி' தளத்தில் வெளியாகி உள்ளது வெங்கட் பிரபு தயாரித்துள்ள புதுப்படம்.
தனது 'பிளாக் டிக்கெட்' நிறுவனம் சார்பில் வெங்கட் பிரபு தயாரித்துள்ள படம் 'ஆர்.கே. நகர்'. சரவணராஜன் இயக்கி உள்ளார்.
இதில் வைபவ் நாயகனாகவும் சனா ஆல்டாஃப் நாயகியாகவும் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
தனியார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு இணையத்தளங்கள் மூலம் பரவலாக விளம்பரம் செய்யப்படுகிறது. இதனால் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணையம் வழி நேரடியாக திரைப்படங்களை வெளியிட திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதையும் மீறி தனது படத்தை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. இது கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

