தனக்குத் திருமணம் என்று வெளியான செய்தி ஒரு வேடிக்கை என்று விழுந்துவிழுந்து சிரிக்கிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
எனது திருமணம் குறித்த வதந்திகள் உண்மையிலேயே வேடிக்கையானவை என்று அவர் கூறியுள்ளார்.
வரலட்சுமிக்கும் இந்திய கிரிக்கெட் அணியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள சந்தீப் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அண்மையில் தமிழக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து தனக்குத் திருமணம் நிச்சயமாகவில்லை. இப்போது திருமணம் செய்துகொள்ளும் விருப்பமும் இல்லை. தான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற வதந்திகள் என்னைப்பற்றிய எனக்கே தெரியாத பல விஷயங்களை நான் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. எனவே நான் இதுபோன்ற வதந்திகளை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.
எனது திருமணம் குறித்த செய்தி எனக்கு மட்டும் ஏன் கடைசியாகத் தெரியவருகிறது என்று தெரியவில்லை. ஏன் என் திருமணத்தில் எல்லோரும் ஆர்வமாகவும் அக்கறையாகவும் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
எனக்குத் திருமணம் என்றால் அதை என் மொட்டை மாடியில் ஏறி நின்று அனைவருக்கும் கூவி கூவி அறிவிப்பேன். ஆனால், என்ன செய்வது என் திருமணம் இப்போதில்லையோ என்று கூறியுள்ளார் வரலட்சுமி.