‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இரண்டாம் பாகத்தையும் கவுதம் மேனன் தான் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
கடந்த 2010ம் ஆண்டு வெளியானது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இதில் சிம்பு, திரிஷா இணைந்து நடித்திருந்தனர்.
நேர்த்தியான திரைக்கதை, வசனங்கள், இசை என தரமான திரைப்படத்துக்குரிய அனைத்து அம்சங்களும் இருந்ததால் இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கவுதம் மேனனிடம் கேட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்காக உருவாக்கிய கதையில் இருந்து ஒரு பகுதியை மட்டும் எடுத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் கவுதம் மேனன். இந்தக் குறும்படம் கடந்த மே 20ம் தேதி வெளியானது. இதற்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ இரண்டாம் பாகத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் சிம்பு. ‘மாநாடு’ படம் முடிந்த கையோடு கவுதம் இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.