நடிகர், நடிகைகள் இந்த கொரோனா காலக்கட்டத்தில் தங்களால் இயன்ற அளவு மற்றவர்களுக்கு உதவுகின்றனர். அந்த வகையில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா ஓவியங்கள் மூலம் கொரோனா நிதி திரட்டி வருகிறார்.
‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த இவர் ஓவியங்கள் தீட்டுவதில் ஆர்வமும் திறமையும் உள்ளவர். இவரது ஓவியங்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா விவகாரத்தால் வருமானம் இன்றித் தவிக்கும் தொழிலாளர்களின் தவிப்பு இவரை வருத்தப்பட வைத்துள்ளது.
நண்பர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பது இவருக்கு வருத்தம் அளித்தாலும், வேறொரு கோணத்தில் சிந்திக்கும்போது இது ஒரு பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறதாம்.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்பதாகச் சொல்பவர், வீட்டில் இருப்பது தனக்குச் சவாலானதாக இருக்கவில்லை என்கிறார்.
“அன்புக்குரியவர்களுடன் எந்த வேலையும் செய்யாமல் தொடர்ந்து வீட்டில் இருப்பதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். ஆனால், தொழிலாளர்களோ தங்கள் வீடுகளை விட்டு வெளியே உள்ளனர். குடும்பத்துடன் சாப்பிட உணவின்றி ஏராளமானோர் தவிக்கின்றனர். இந்த வாழ்க்கைதான் சவாலானது. அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்.
“இந்த ஊரடங்கின் மூலம் நான் மீண்டும் ஓவியம் வரையத் தொடங்கி விட்டேன். இவற்றை வைத்து நிதி திரட்ட வேண்டும் என்பதே எனது எண்ணம். நல்ல மனம் படைத்தவர்கள் நினைத்தால் பெரிய அளவில் தொழிலாளர்களுக்கு உதவ முடியும்,” என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.
இதற்கிடையே நடிகர் அஜித்தின் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக விஜய்யும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அவ்வப்போது சில உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறாராம்.
இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என திரையுலகப் பிரமுகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நடிகர் மகேஷ் பாபு தற்போது படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்புவது குறித்து காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நாம் இயல்புநிலைக்குத் திரும்புகிறோம். இப்படியான சூழலில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை உணருங்கள். நீங்கள் எப்போது வெளியே சென்றாலும் முகக்கவசம் அணியுங்கள். நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்க நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச செயல் அதுதான். அது பார்க்க வித்தியாசமாகத் தெரியலாம். ஆனால் அதுதான் இந்த நேரத்தில் தேவை.
“நாம் அதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்போம். புது இயல்பு நிலைக்கு ஏற்றவாறு மாறுவோம். மீண்டும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். முகக்கவசம் அணிவது எனக்கு நன்றாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு?” என்று அந்த காணொளியில் பேசுகிறார் மகேஷ் பாபு.
சில வாரங்களுக்கு முன்பு சமூக விலகலுடன், அச்சத்தை உருவாக்குபவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார்.