தனது தந்தை அருகில் இல்லாததை நினைத்து மனம் மிகவும் ஏங்குவதாகச் சொல்கிறார் நடிகர் அதர்வா.
தினமும் தந்தையை நினைத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதர்வா திரை உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் முன்பே அவரது தந்தையும் நடிகருமான முரளி காலமாகி விட்டார்.
இந்நிலையில் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அதர்வா.
“நான் பார்த்ததிலேயே மிகப் பணிவான மற்றும் வலிமையான நபர் நீங்கள்தான். உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா.
“நாங்கள் உங்களை விரும்புகிறோம். தினமும் நீங்கள் அருகில் இல்லை என்பதை நினைத்து ஏங்குகிறோம்,” என்று தமது பதிவில் அதர்வா தெரிவித்துள்ளார்.
மேலும் சிறு குழந்தையாக இருந்தபோது தனது தந்தையின் கழுத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக பின்னூட்டமிட்டுள்ளனர். தற்போது ‘தள்ளிப்போகாதே’ உட்பட மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அதர்வா.
மிக விரைவில் தமக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுத்துறையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளாராம்.
இதுகுறித்த அறிவிப்பு ஊடரங்கு முடிந்த பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் முழுநீள குடும்பச் சித்திரம் ஒன்றில் நடிக்க வேண்டும் எனவும் விரும்புகிறாராம் அதர்வா. தந்தை முரளியின் படங்களில் காதலுக்கு உள்ள முக்கியத்துவம் நகைச்சுவைக்கும் இருக்கும் என சிலர் அவரிடம் சுட்டிக்காட்டி உள்ளனர். இதையடுத்து அதே வழியை அதர்வாவும் பின்பற்றுவார் எனக் கூறப்படுகிறது.