ஐந்தாண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளராக மட்டுமே அறியப்பட்ட ஆர்.கே. சுரேஷ் இப்போது கதாநாயகனாகவும் முக்கியத்துவம் வாய்ந்த குணசித்திரக் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறார்.
தற்போது ‘காடுவெட்டி’, ‘ஜோசப்’ மலையாளப் படத்தின் தெலுங்கு மறுபதிப்பு, இயக்குநர் பாலாவின் படம் என வரிசையாக ஐந்தாறு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஆர்.கே. சுரேஷ்.
“பல ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன். நடிக்க வந்து நான்காண்டுகள்தான் ஆகிறது. தொடக்கத்தில் ரசிகர்கள் நம்மை ஏற்பார்களா எனும் சந்தேகம் இருந்தது. இப்போது எந்தவித தயக்கமும் இல்லை,” என்கிறார் ஆர்.கே.சுரேஷ்.
‘காடுவெட்டி’ படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறாராம். சோலை இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சமூகத்துக்கு தேவையான பல்வேறு நல்ல கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகச் சொல்கிறார்.
அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய படங்களின் வரத்தால் திரையுலகில் சலசலப்பு நிலவுவதாக குறிப்பிடுபவர், ‘காடுவெட்டி’ யார் மனதையும் புண்படுத்தாது என உத்தரவாதம் அளிக்கிறார்.
“இது நாயகனைச் சார்ந்துள்ள கதை. இயக்குநர் சோலை ஒவ்வொரு காட்சியையும் மிகக் கவனமாக உருவாக்கி உள்ளார். அதனால்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
“தமிழகத்தில் ‘காடுவெட்டி’ குருவும் முக்கியமான ஒரு சமுதாய பிரமுகர். எனினும் இது அவருடைய வாழ்க்கைப்படம் என்று கூறிவிட முடியாது. ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தைப் போன்ற கதைக்களம் இது.
“நான் காடுவெட்டி குருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் போன்ற கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று பலரும் கூறினர். எனது தோற்றத்துக்கு குரலுக்கு ஏற்ற மாதிரியான கதை தேடி வரும்போது மறுக்காமல் ஏற்று நடிக்கிறேன். படத்தைப் படமாகப் பார்த்தால் எந்தப் பிரச்சினையும் வர வாய்ப்பில்லை.
“அதுமட்டுமல்ல, ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் என்னிடம்தான் கால்ஷீட் கேட்டுள்ளனர். கைவசம் உள்ள படங்களை முடித்த கையோடு அதில் நடிக்க இருக்கிறேன். அது விசாரணை, புலனாய்வை மையமாக வைத்து உருவாகும் படம். மலையாளப் படமான ‘ஜோசப்’ மறுபதிப்பை இயக்குநர் பாலா தயாரிக்கிறார்,” என்கிறார் சுரேஷ்.
இன்று சினிமாவில் தாம் ஒரு நாயகனாக தைரியமாக நெஞ்சம் நிமிர்த்தி நிற்க முடிகிறது என்றால் அதற்கு பாலா அண்ணன்தான் காரணம் என்று குறிப்பிடுபவர், பாலா என்ன சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் தமது வழக்கம் என்கிறார்.
பாலாவின் அடுத்த படத்தில் இவர்தான் நாயகன் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படி நடந்தால் தன் வாழ்க்கையில் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஏதும் இருக்க முடியாது என்று உற்சாகமாகச் சொல்லும் ஆர்.கே. சுரேஷ் முன்பு பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’யில் நடித்துள்ளார்.
“என்னுடைய நடிப்பை பாலா அண்ணனே பாராட்டி உள்ளார். எனக்கு அது ஒன்றே போதும்,” என்கிறார் ஆர்.கே. சுரேஷ்.