விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களுக்கு தெலுங்கு தேசத்திலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தெலுங்கு ரசிகர்களை கவர்வதற்கு என்றே அவரது ஆதரவு தரப்பு சில காட்சிகளையும் வசனங்களையும் வலியத் திணிப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
இதை வைத்து சிலர் அரசியல் செய்ய வாய்ப்பு இருப்பதாக விஜய் ஆண்டனி காதுகளுக்கு நலன்விரும்பிகள் இதைக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து தனது படங்கள் தமிழ் ரசிகர்களை மட்டுமே மனதிற்கொண்டு உருவாக்கப்படுவதாக விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
“எனது படங்கள் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் ஓரளவு வரவேற்புப் பெறுவதை அறிந்துள்ளேன். என்னைப் பொறுத்த வரை அனைத்தும் கதைக் களத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும் என விரும்புவேன்.
“தேவையின்றி காட்சிகளை, வசனங்களைத் திணிப்பதில்லை. அதே சமயம் சில அடிப்படை விஷயங்களுக்காக ஒன்றிரண்டு வசனங்களை மொழிக்கு ஏற்ப சேர்ப்பதுண்டு.
“இதுவரை தெலுங்கு ரசிகர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் எனது படங்களில் எந்த காட்சியும் கூடுதலாக சேர்க்கப்படவில்லை,” என்கிறார் விஜய் ஆண்டனி.
தாம் நடித்துள்ள ‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படம் தான் தமது இந்த விளக்கத்துக்கு சரியான உதாரணம் என்று குறிப்பிடும் அவர், அப்படத்தில் நகைச்சுவை கருதி தெலுங்குப் பதிப்பில் சில வசனங்கள் மட்டும் சேர்க்கப்பட்டதாக சுட்டிக்காட்டுகிறார்.
தன்னைப் போலவே மேலும் சில நடிகர், நடிகைகள் சம்பளத்தைக் குறைக்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது என்கிறார் விஜய் ஆண்டனி. சம்பளம் குறைத்தோர் பட்டியலில் அண்மையில் இணைந்திருப்பவர் நடிகர் நாசர்.