தற்போதைய சூழ்நிலையில் புதுப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வாய்ப்பே இல்லை என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். இணையம் வழி நேரடியாக படங்களை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இது தொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளை திறந்த பிறகு முந்தைய இயல்பு நிலை திரும்பிவிடும் என்பதை அதன் உரிமையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா ஊரடங்கால் படங்களை திரையரங்குகளில் திரையிட முடியாமல் இரண்டு மாதங்களுக்கு மேலாக தயாரிப்பாளர்கள் காத்திருக்கின்றனர். இதனால் புதிய படங்களை இணையத்தளத்தில் வெளியிட சிலர் முன் வந்துள்ளனர். வேறு வழி இல்லாமல்தான் இணையதளத்தில் வெளியிட வேண்டிய நிலைமை ஏற்பட்டு உள்ளது,” என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.
திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் அவற்றில் தங்கள் படங்களை வெளியிடவே தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்களுக்கும் அவ்வாறு படம் பார்ப்பதுதான் பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
‘ஓடிடி’ எனப்படும் புதிய தளத்தில் திரைப்படங்களை வெளியிட முடியும் என்பது நல்ல விஷயம் என்றும், அதில் புதுப்படங்களை வெளியிடுவது என்பது தற்காலிகமான ஒரு ஏற்பாடுதான் என்றும் வித்யா மேலும் கூறி உள்ளார்.
“எனவே தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும்.
“அப்போதுதான் திரையுலகம் தொடர்ந்து வளர்ச்சி காணும். “இல்லையெனில் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்,” என்கிறார் வித்யா.