‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது கல்லூரி மாணவர்கள் ஒன்றாகச் சுற்றுலா சென்று மகிழ்வது போன்ற உணர்வையும் அனுபவத்தையும் தந்ததாகச் சொல்கிறார் அதன் நாயகி மாளவிகா மோகனன்.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது இங்கிலாந்தில் மேற்கல்வி பயின்றுவரும் இவரது இளைய சகோதரர் நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கிக் கொண்டார்.
இதனால் வருத்தத்தில் இருந்த மாளவிகா தற்போது இரட்டிப்பு உற்சாகத்துடனும் நிம்மதியுடனும் காணப்படுகிறார். காரணம் சகோதரர் ஊர் திரும்பி விட்டார்.
“தற்போது தங்குவிடுதியில் 14 நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என் தம்பி. அவரும் வீட்டுக்கு வந்துவிட்டால் பிறகு ஆட்டம் பாட்டம்தான்.
“எல்லோருக்கும் இந்த ஊரடங்கு வேளையில் பொழுது போவது சிரமமாக இருக்கிறது எனில் நான் வழக்கத்தைவிட கூடுதல் உற்சாகத்துடன் இருப்பதாகச் சொல்வேன்.
“ஏனெனில் படப்பிடிப்புக்காக காலை சீக்கிரமே எழுந்து ஓடிய காலம் போய் இப்போது மதியம் 12 மணி அளவில்தான் தூங்கி எழுகிறேன்,” என்று வெளிப்படையாகச் சொல்லிச் சிரிக்கிறார் மாளவிகா.
ஒருவேளை சீக்கிரமே கண்விழித்தால் சமையலில் தன் அம்மாவுக்கு சில உதவிகளைச் செய்வது வழக்கமாம்.
இதுவரை சமையலறைப் பக்கம் அதிகம் செல்லாதவர் இப்போதும்கூட பாத்திரங்கள் கழுவுவது, காய்கறிகள் நறுக்குவது, காரப்பொடி, உப்பு என சமையல் பொருட்களை எடுத்துக் கொடுப்பது என்று சின்னச் சின்ன உதவிகளைத்தான் செய்கிறாராம்.
“சமையலை முடித்தபிறகு அந்த அறையை சுத்தம் செய்வதும் என் வேலைதான். மதிய உணவுக்குப்பின் புத்தகங்கள் படிப்பேன். தோழிகளுடன் இணையம் வழி சதுரங்கம், லூடோ போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பேன்.
“மாலை ஆகிவிட்டால் சினிமா பார்ப்பதுதான் என்னுடைய முக்கியமான வேலை, பொழுதுபோக்கு. வெளிநாட்டுப் படங்களை அதிகம் பார்த்து வருகிறேன். அடுத்த சுற்றில் இந்தியப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்.
“இவ்வாறு இரவு கண்விழித்துப் படங்கள் பார்ப்பதால்தான் மறுநாள் காலை கண்விழிக்க மிகவும் தாமதமாகிறது,” என்கிறார் மாளவிகா.
‘மாஸ்டர்’ பட அனுபவம் இவருக்கு எதிர்பார்த்ததைவிட அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. முழுக்க இளையர்களின் பங்கேற்புடன் ‘மாஸ்டர்’ உருவாகி உள்ளதாகக் குறிப்பிடுபவர் எல்லோருமே இளையர்களுக்கு உரிய சுறுசுறுப்புடன் பணியாற்றியதாகச் சொல்கிறார்.
“படப்பிடிப்புத்தளம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். விஜய் சார் இவ்வளவு எளிமையான மனிதராக பேசிப் பழகுவார் என அறவே எதிர்பார்க்கவில்லை. படப்பிடிப்பின் முதல் நாளன்று அவருடன் இணைந்து நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நான் சற்று தடுமாற்றத்துடன் இருந்தேன். அது சற்று கடினமான காட்சியும்கூட.
“ஆனால், விஜய் சார் நான் கச்சிதமாக நடிப்பதாகச் சொல்லி ஊக்கப்படுத்தினார். படப்பிடிப்பு முழுவதும் அனைவரையும் அவர் இவ்வாறு பாராட்டி உற்சாகமளித்தது ஆச்சரியப்பட வைத்தது.
“பெரும்பாலும் அமைதியாக இருப்பார். ஆனால், அவரது இனிமையான அணுகுமுறை வெகுவாக ரசிக்க வைக்கும். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாம் சொல்லும் சில யோசனைகள் சரியாக இருந்தால் உடனே ஏற்றுக்கொள்வார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்,” என்கிறார் மாளவிகா மோகனன்.
‘மாஸ்டர்’ படத்தின் அன்றாட படப்பிடிப்பு முடிந்த பிறகும் படக்குழுவினர் உடனே கிளம்பிவிட மாட்டார்களாம். சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து கலகலப்பாகப் பேசி சிரித்து மகிழ்வார்களாம்.
“அதனால்தான் இந்தப் படத்தில் பங்குபெற்றது ஒவ்வொருவருக்கும் கல்லூரி நாட்களை நினைவுபடுத்துவது போல் இருந்தது என்பேன். இதுபோன்ற படங்களில் நடித்தது, அதுவும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தது எனது அதிர்ஷ்டம்,” என்கிறார் மாளவிகா மோகனன்.
மேலும் தமிழ்த் திரையுலகில் எல்லோருமே நட்பாகப் பேசிப் பழகுவதாகப் பாராட்டுகிறார். எனவே தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புபவர், ‘மாஸ்டர்’ வெற்றி தமது இந்த ஆசையை நிறைவேற்றும் என நம்புகிறாராம்.