புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.
"அண்மையில் ஒருநாள் நான் தூங்கி விழித்தபோது என் அறையின் சன்னலுக்கு வெளியே சில தேனீக்களைக் கண்டேன். எனது வீட்டின் மாடத்தின் அருகே உள்ள ஒரு மாமரத்தில் ஒரு பெரிய தேன்கூடு இருந்தது.
"அவை என்னைக் கடிக்காமல் இருக்க வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த சிலரை அழைத்தேன்," எனக் குறிப்பிட்டுள்ளார் ஆண்ட்ரியா.
தேனீக்களைப் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து சாகடிப்பது அல்லது அவற்றோடு வாழ பழகிக்கொள்வது என்ற இரண்டு வாய்ப்புகள் தமக்கு இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தமக்குப் பூச்சிகள் என்றாலே பயம் எனக் கூறியுள்ளார்.
"தேனீக்களை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கும் இருப்பதாக உணர்கிறேன். ஏனெனில் சுற்றுப்புறச் சூழலை காப்பதில் அவற்றின் பங்கு முக்கியமானது. தேனீக்கள் அழிந்தால் மனித இனமும் அழிந்து விடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
"இது தேனீக்கள் பற்றிய கதையாக இருந்தாலும் தற்போது நாட்டில் நடக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினையும் இதில் இருக்கிறது.
"என் வீட்டுப் பால்கனியில் இருக்கும் தேனீக்களை பாதுகாப்பதில் எனக்கு பொறுப்பு இருக்கிறது. அப்படி என்றால் நாடு முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பது அரசின் பொறுப்பு அல்லவா?" என்று ஆண்ட்ரியா தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேனீக்களிடம் இருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அதிகம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.