வாழ்க்கையின் சில தருணங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்கத் தயங்கக் கூடாது என்கிறார் நடிகை கங்கனா ரணாவத்.
மும்பையில் தனது நிறுவனத்துக்காக இவர் வாங்கியுள்ள பிரம்மாண்ட கட்டடம் மற்றும் அதற்காக இவர் செய்துள்ள முதலீடு திரையுலகினரை அசர வைத்துள்ளது.
நெருக்கமானவர்கள் பலரும் வேறு தொழிலில் முதலீடு செய்யுமாறும் கட்டடத்தில் முதலீடு செய்யுமாறும் அறிவுரை கூறினார்களாம்.
ஆனால் எதையும் காதில் போட்டுக்கொள்ளாத கங்கனா, தன் போக்கில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.
மணிகர்ணிகா ஃபிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ள இவர், அந்த நிறுவனத்துக்காக மும்பையில் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் பெரிய மாளிகையைப் போன்ற கட்டடத்தை வாங்கி அழகாக தன் விருப்பம் போல் வடிவமைத்துள்ளார்.
இதற்காக அவர் செலவழித்திருக்கும் தொகை 48 கோடி ரூபாய்.
சொந்தமாக ஒரு ஸ்டூடியோ கட்ட நினைத்ததாகவும் அது தற்போது சாத்தியப்படாததால் தனக்குப் பிடித்த ஒரு மாளிகையை வாங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“படப்பிடிப்பு அரங்கு, ஒலிப்பதிவுக் கூடம் உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்டூடியோவை நிர்மாணிக்க விரும்பினேன். ஆனால் நான் நடித்த ‘ரங்கூன்’, ‘சிம்ரன்’ உள்ளிட்ட சில படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் எனது முயற்சியை சற்று தள்ளிப் போட்டேன்.
“மணிகர்ணிகா’வுக்குப் பிறகு நிலைமை மாறியது. எனக்குப் பிடித்த விதத்தில் என் மாளிகையைக் கட்டமைத்துக் கொண்டேன்.
“வேறெங்காவது வைத்து பட வேலைகளைச் செய்யலாமே என்று பலரும் யோசனை கூறினர். ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாடகைக்கு எடுக்கக் கூடாதா என்றும் கேட்டனர். உயிர் இல்லாத ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் என்னால் இருக்கமுடியாது என்பதே எனது பதில்,” என்று கங்கனா தெரிவித்துள்ளார்.
உயிர்ப்புடன் இருக்கும் சுவர்கள், கண்களை குளிர வைக்கும் பசுமை உள்ளிட்ட அம்சங்கள் எப்போதுமே தன்னைச் சுற்றியிருக்க வேண்டும் என்று குறிப்பிடுபவர், இந்த எண்ணத்துடனேயே புது மாளிகையை வாங்கி இருப்பதாகச் சொல்கிறார்.
“எனது கணக்காய்வாளர், ஏன் இந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள்? வழக்கமாக நீங்கள் எந்த தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றுகிறீர்களோ அவர்களே உங்களுக்கான இடத்தை வாடகைக்கு எடுத்துத் தருவார்களே.
இந்த பணத்தை வைத்து பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் அல்லது ஓர் உணவகத்தை வாங்குங்கள் என்றார்.
“குறைந்தது ஆண்டுக்கு 40, 50 லட்சம் வாடகைப் பணம் கிடைக்கும் என்றும் கூறினார். ஆனால் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்,” என்கிறார் கங்கனா.
இவரது பெற்றோர் உட்பட பலரும் பணத்தை வீணடிப்பதாக விமர்சிக்கிறார்களாம். ஆனால் இந்த முதலீட்டை தாம் ஒரு சவாலாகக் கருதுவதாகவும் இது நல்ல முதலீடா இல்லையா என்பது போகப் போகத் தெரியும் என்றும் சொல்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகையாக நான் வெற்றிபெற்றுவிட்டேன். அந்த நம்பிக்கையில் தொடர்ந்து நடிக்கிறேன். கொரோனா விவகாரத்துக்குப் பிறகு திரையுலகம் மின்னிலக்க துறையாகிவிடும்,.
“அதற்கேற்ப திரையுலகத்தினர் அனைவரும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார் கங்கனா.