‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி அதன் நாயகன் அசோக் செல்வனை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பார்ப்பதற்கு சாதுவாகக் காட்சியளிப்பவர் மலையாளப் படம் ஒன்றில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்துள்ளார். மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாகிறார் அசோக்.
தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர்களுக்கு ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ ஆகிய படங்களில் அசோக் செல்வன் நடித்திருப்பது தெரிந்திருக்கும். அந்தப் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற நிறைய போராடினாராம்.
“நடிக்கவேண்டும் என்ற முயற்சியைத் தொடங்கியபோது பல நிறுவனங்களின் படியேறி வாய்ப்புக் கேட்டு அலுத்துப் போயிருக்கிறேன். ஏகப்பட்ட நடிப்புத் தேர்வில் பங்கேற்றும் எனக்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஒருகட்டத்தில் சினிமா வேண்டாம் என்றுகூட முடிவெடுத்தேன்.
“அப்போதுதான் ‘சூது கவ்வும்’ வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை இந்தப் படம் கிடைக்காவிட்டால் சினிமாவில் நான் இருந்திருக்க மாட்டேன். அதற்காக இயக்குநர் நலன் குமாரசாமிக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ ஆகிய இரு படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராவதாக நானும் ஒரு தகவலைக் கேள்விப்பட்டேன். ஆனால் எந்தளவு உண்மை என்பது தெரியாது,” என்று சொல்லும் அசோக் செல்வன் நல்ல கிரிக்கெட் வீரராம்.
17 வயதுக்குட்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்திருக்கிறார்.
“என் மனச்சோர்விற்கு கிரிக்கெட்தான் சிறந்த மருந்தாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது சினிமா வாய்ப்புகள் ஏதும் தேடிவரவில்லை. வாங்கிய கடனுக்கு மாதத் தவணை கட்டுவது, குடும்ப விவகாரங்கள் எதுவும் மனதில் இருக்காது.
“என்னை நோக்கி வரும் பந்தை எப்படி விளாச வேண்டும் என்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும். கிரிக்கெட்தான் என்னைப் பலவகையிலும் ஊக்கப்படுத்தியது,” என்கிறார் அசோக் செல்வன்.
கடந்தாண்டும்கூட ஒரு போட்டியில் சதமடித்தாராம். அந்தச் சமயத்தில் வாய்ப்பின்றி இருந்தாராம். இதனால் மன அழுத்தம் அதிகரித்த நிலையில் கிரிக்கெட் போட்டியில் அடித்த அந்த சதம்தான் மீண்டும் முயற்சிகளைத் தொடரவேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்ததாகச் சொல்கிறார்.
“என் வாழ்க்கையில் அந்தக் குறிப்பிட்ட போட்டியும் நான் அடித்த சதமும் மறக்கமுடியாத நிகழ்வாக என்றும் மனதில் பதிந்திருக்கும். மலையாளத்தில் ஒரு வரலாற்றுப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். எனவே, இன்னொரு வரலாற்றுப் படத்தில் நாயகனாக நடிக்கவேண்டும் என விரும்புகிறேன்.
“பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை. அதேபோல் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடிக்க விரும்புகிறேன். இவையெல்லாம் எனது கனவுக் கதாபாத்திரங்கள்,” என்று சொல்லும் அசோக் செல்வன், இந்த ஊரடங்கு வேளையில் குடும்பத்தோடு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.
அம்மாவின் சமையல் இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். அண்மைய சில வாரங்களாக அவர் வகை வகையாகச் சமைத்துக் கொடுக்க அனைத்து உணவுகளையும் ஒரு பிடி பிடித்து வருவதாகச் சொல்கிறார். புது கார் வாங்கவேண்டும், சென்னையில் பெரிய வீடு வாங்கவேண்டும் என்பதெல்லாம் அசோக் செல்வனின் ஆசைகளில் சில. திரைப்படங்களில் நடித்ததன்வழி ஆசைப்பட்ட காரை வாங்கிவிட்டாராம். இப்போது வீடு வாங்க உழைத்துக் கொண்டிருக்கிறார்.