கொரோனா ஊரடங்கு வேளையில் தன் கணவரின் சொந்த ஊரான பார்சிலோனாவில் முடங்கி உள்ளார் ஸ்ரேயா. அங்கு இந்திய உணவை ரசிக்க முடியாமல் தவிக்கிறாராம்.
எப்போது ஊரடங்கு முடிவுக்கு வரும், எப்போது மும்பையில் கால்பதிப்போம் என்ற ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் ‘சண்டக்காரி’, ‘நரகாசுரன்’ ஆகிய இரு படங்களில் நடித்துள்ளவர், புதுப்படம் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம்.
மும்பையில் இருக்கும்போது இரு தினங்களுக்கு ஒருமுறையாவது அங்குள்ள வெவ்வேறு உணவகங்களுக்குச் செல்வது ஸ்ரேயாவின் வழக்கம். பரோட்டாவும் தோசையும்தான் இவரது விருப்ப உணவுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளன. கணவர் ஆந்த்ரேயியும் உணவகங்கள் நடத்தி வருகிறார்.
“என் கணவருக்கு பானிபூரி என்றால் அவ்வளவு பிரியம். மும்பை வந்தால் தினமும் பானிபூரியை ருசிப்பார். நான் பரோட்டா, தோசை இல்லாமல் தவிப்பது போல் அவரும் பானிபூரியை நினைத்து ஏங்குகிறார்.
“அவரது புலம்பல் தாங்காமல் கைவசம் உள்ள பொருட்களைக் கொண்டு என் கையால் பானிபூரி தயாரித்துக் கொடுத்தேன்.
“மும்பையில் கிடைப்பதுபோல் ருசியாக இல்லாவிட்டாலும் ஓரளவு திருப்தி அடைந்துள்ளார்,” என்று சிரிக்கிறார் ஸ்ரேயா.
கொரோனா கிருமி விவகாரம் முடிவுக்கு வந்த பிறகு தமிழ்ப் படங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம். முதலில் ‘சண்டக்காரி’, ‘நரகாசுரன்’ ஆகிய இரு படங்களும் சிக்கலின்றி வெளியாக வேண்டும் என கடவுளிடம் வேண்டி வருகிறாராம்.
“இந்த இரு படங்களிலுமே எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. விமலுடன் மாதேஷ் சார் இயக்கத்தில் ‘சண்டக்காரி’யிலும் ‘நரகாசுரன்’ படத்தில் அரவிந்த்சாமியுடனும் நடித்துள்ளேன். கார்த்திக் நரேனின் ‘நரகாசுரன்’ படத்தில் ஏற்றுள்ள கதாபாத்திரம் கிட்டத்தட்ட என் நிஜ வாழ்க்கையுடன் ஒத்துப்போகும்.
“படம் பார்த்துவிட்டேன். எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. பல திறமைசாலிகள் ஒன்றுசேர்ந்துள்ள படைப்பு என்பதால் ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்,” என்று சொல்லும் ஸ்ரேயாவுக்கு, தனது சக நாயகிகளான திரிஷா, சமந்தா ஆகிய இருவரையும் மிகவும் பிடிக்குமாம். இருவருடனும் நல்ல நட்பு நீடித்து வருகிறதாம்.
“திரிஷாவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். மிகுந்த திறமைசாலி. அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். பழகுவதற்கு இனிமையானவர்.
“தெலுங்கில் உருவான ‘மனம்’ படத்தில் நடித்தபோதுதான் சமந்தாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எப்போதுமே கலகலப்பாக இருக்க விரும்புவார்.
“நம்மையும் உற்சாகப்படுத்துவார். எனது செல்லமான தோழி என்று அவரைக் குறிப்பிடலாம்,” என்று சொல்லும் ஸ்ரேயா, நிறைய படங்களில் நடித்த அனுபவம் இருப்பதால் இனி கனமான, சவாலான, வித்தியாசமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தப் போவதாகச் சொல்கிறார். அப்போதுதான் ரசிகர்கள் நீண்ட காலம் தம்மை மனதில் வைத்திருப்பார்கள் என்கிறார். நல்ல கதைகளுக்கான வேட்டையைத் துவங்கி விட்டாராம்.
“சில படங்களில் நடித்து முடித்த பிறகுதான் ஏன்தான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டோமோ என்று எண்ணத் தோன்றும். சில படங்களின் கதை சலிப்பை ஏற்படுத்தும்.
“இனிமேல் அவ்வாறு வருந்த வைக்கும், சலிப்படையச் செய்யும் கதைகளை ஏற்பதாக இல்லை. தமிழ் ரசிகர்கள் தரமானவர்கள். அவர்களை திருப்திப்படுத்தும் வகையிலான படைப்புகளில் பங்கேற்க விரும்புகிறேன்,” என்கிறார் ஸ்ரேயா.
அண்மையில் மது அருந்துவது போன்ற புகைப்படத்தை இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது சர்ச்சையானது. அன்றைய தினம் கணவரின் பிறந்தநாளாம். அதனால் ஒப்புக்கு ஒரு தேக்கரண்டி மது அருந்தியதாக கூறியுள்ளார். மற்றபடி மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு என்பதுதான் உண்மை என உணர்ந்துள்ளாராம்.