எப்போதுமே தமிழகத்தில் கோடைக்காலம் என்றால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திலும் கொண்டாட்டமாக இருக்கும். எங்கு திரும்பினாலும் திருவிழாக் காட்சிதான்.
புதுப்படங்கள் வெளியீடு, குறிப்பாக உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் நேரம் என்பதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதும். படங்களின் வசூல் எகிறும்.
அதேபோல் கோடைக்கால வெற்றிக்குப் பிறகு உச்ச நட்சத்திரங்களின் சம்பளமும் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு இக்காட்சிகள் எதையும் பார்க்க முடியவில்லை.
ஊரடங்கால் திரையுலகமும் திரையரங்குகளும் முடங்கிக் கிடக்கின்றன. ஊரடங்கு முடிவடையும்போது திரையரங்குகள் இயங்கும் என்றாலும், இன்றைய தேதி வரை சுமார் 90 படங்கள் வெளியீடு காண காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் இத்தனைப் படங்களையும் வெளியிட எத்தனைக் காலம் ஆகும் என்பது தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்களின் முழுக் கவனமும் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் மீதுதான் பதிந்துள்ளது.
துவண்டு போயுள்ள தொழிலை ‘மாஸ்டர்’ போன்ற பெரிய, பிரம்மாண்டமான படத்தால்தான் தூக்கி நிறுத்த முடியும் என அவர்கள் கருதுகின்றனராம்.
மேலும் விஜய் போன்ற நடிகரால்தான் மீண்டும் ரசிகர்களை, பொதுமக்களைத் திரையரங்குகள் பக்கம் இழுக்க முடியும் என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு குறித்து பலவிதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
தமிழகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் கூறுகையில், சங்க உறுப்பினர்கள் அத்தனை பேருமே ‘மாஸ்டர்’ படத்தைத்தான் முதலில் திரையிட விரும்புவதாகக் குறிப்பிடுகின்றனர்.
“பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள, பெரிய நடிகர்கள் நடித்த படங்களில் நிச்சயம் ‘மாஸ்டர்’ படத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கமுடியும். தவிர, அந்தப் படம்தான் வெளியீடு காணத் தயார் நிலையில் உள்ளது. எனவே அதன் தயாரிப்புத் தரப்பிடம் பேசி வருகிறோம்.
“திரையரங்குகள் திறக்கப்படும்போது அனைத்தையும் பேசி முடிவு செய்யலாம் என்று கூறியிருக்கிறார்கள். நாங்களும் காத்திருக்கிறோம்,” என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுவரை திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படவில்லை. ஒருசில மாநிலங்களில் குறைந்த அளவிலாவது திரையரங்குகள் திறக்கப்பட்டால்தான் தமிழக அரசும் திரையரங்குகளை திறக்க முன்வரும் என்கிறார் திருப்பூர் சுப்பிரமணியம்.
இந்நிலையில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் வேறுசில பிரச்சினைகள் இருப்பதாக அதன் உரிமையாளர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
“படம் பார்க்க வரும் அனைவரது உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க வேண்டும், தனியாக வருபவர்களுக்கு அருகே உள்ள இருக்கையை காலியாக வைத்திருக்க வேண்டும். திரையரங்க உணவகத்தில் பணியாற்றுபவர்கள் அனைத்து சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கிருமிநாசினி கொண்டு திரையரங்க வளாகத்தை தினமும் சுத்தப்படுத்த வேண்டும் எனப் பல விஷயங்கள் உள்ளன,” என்று சுட்டிக்காட்டும் உரிமையாளர்கள் தரப்பு, இதனால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவுகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும் என்கிறார்கள்.
இதனால் ஊரடங்குக்குப் பிறகு திரையரங்க நுழைவுச்சீட்டின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அரசாங்கம் விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் திரையரங்குகளில் 50 விழுக்காடு ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு தரப்பினர், தேவையின்றி கூடுதல் விலை கொடுக்க ரசிகர்கள் தயாராக இருப்பார்களா என்பதும் கொரோனா கிருமி அச்சமின்றி படம் பார்க்க வருவார்களா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்கின்றனர்.
ஆனால், விஜய் தரப்போ ‘மாஸ்டர்’ எப்போது வந்தாலும் பெரிய வெற்றியைப் பெறும் என்கிறது.
இதற்கிடையே தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் வெளிநாடுகளிலும் இயல்புநிலை திரும்பினால்தான் படத்தை வெளியிடுவது என ‘மாஸ்டர்’ தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
ஏனெனில் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை விற்பதன் மூலம் கிடைக்கும் கணிசமான தொகையை இழக்க அவர்கள் தயாராக இல்லை.
“அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் தமிழ் சினிமா ரசிகர்கள் விஜய், அஜீத் படங்கள் வெளியாகும்போது திரையரங்கத்துக்கு வந்து கொண்டாடுவார்கள். இதனால் வசூல் சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டால்தான் வசூல் குறையாது,” என்று தயாரிப்புத் தரப்பு சுட்டிக்காட்டுகிறது.
எனவே, ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு உலக நாடுகள் கைகளிலும் அடங்கி உள்ளதாக கோடம்பாக்க விவரப்புள்ளிகள் கூறுகின்றனர்.