நடிகர் லாரன்ஸ் அறக்கட்டளை நடத்தி வரும் காப்பகத்தைச் சேர்ந்த 13 குழந்தைகள் கொரோனா கிருமித்தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமது சேவை குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டதாக நெகிழ்வுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரத்துக்கு முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்ததாகவும் இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் 13 குழந்தைகள், 3 ஊழியர்கள், 2 மாற்றுத் திறனாளி ஊழியர்களுக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ள ராகவா லாரன்ஸ், இதனால் தாம் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சைக்குப் பிறகு 13 குழந்தைகளுக்கும் தற்போது தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாம். இதனால் அனைவரும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
“தன்னலமற்ற சேவை புரிந்த அனைத்து மருத்துவர்களுக்கும் தாதியர்க்கும் நன்றி. நான் நம்பியது போலவே, எனது சேவை என் குழந்தைகளைக் காப்பாற்றிவிட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சேவையே கடவுள்,” என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், ஆதரவற்றவர்கள், திரையுலகக் கலைஞர்களுக்குப் பல்வேறு வழிகளில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ்.
இதற்காகப் பல்வேறு தரப்பினரும் அவருக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.