திரைப்பயணத்தில் தாம் நிறைய தோல்விகளை எதிர்கொண்டதாகவும் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார் நடிகர் நந்தா.
‘மவுனம் பேசியதே’, ‘புன்னகைப்பூவே’, ‘ஈரம்’ என வெற்றிப் படங்களில் நடித்திருப்பவர் அண்மையில் ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் இரட்டை வேடங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கியதைப் பெருமையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார் நந்தா. தாம் அனுபவித்த வலிகள் நிறைய நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகச் சொல்பவர், கஷ்டப்படும்போதுதான் சரியான பாதையில் போகிறோம் என்று அர்த்தமாகும் என்கிறார்.
தனக்கென ஒரு வெற்றி இலக்கை நிர்ணயித்திருப்பதாகவும் அதற்காக கடந்த 20 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருப்பதாகவும் சொல்லும் நந்தா, பல கஷ்டங்களைக் கொடுத்தாலும் தனது சினிமா வாழ்க்கை மிகவும் அழகானது என்கிறார்.
தமிழ் ஈழப் போராளி திலீபனின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்க வேண்டும் என்பதுதான் நந்தாவின் சினிமாக் கனவுகளின் உச்சமாம். தனி ஈழக் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனைப் பற்றிய முக்கியமான தகவல்களை அனைத்துத் தரப்பினரிடமும் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என விரும்புகிறாராம்.
“அதற்காகத்தான் திலீபனை மையப்படுத்தி ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சில காட்சிகளைப் படமாக்க வேண்டியுள்ளது. அதன்பிறகு முடிந்தவரை வேகமாகச் செயல்பட்டு அந்தப் படைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன்,” என்கிறார் நந்தா.
தற்போது ‘பரமபத விளையாட்டு’, ‘துப்பறிவாளன்-2’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர், தனிநாயகனாக நடிக்கவும் சில கதைகளைக் கேட்டு வருகிறாராம்.
நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பராக அறியப்படுபவர் நந்தா.
நடிகர் சங்கத்துக்கான கட்டடப் பணிகள் பாதியில் நிற்பது, தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்துப் பலரும் இவரிடம் கேள்விகளை அடுக்குகின்றனர். ஒரு நண்பராக விஷாலுக்கு தோள் கொடுப்பதாக சொல்கிறார்.
“நடிகர் சங்க கட்டடம் பாதியில் நிற்கக் காரணம் சிலரது சுயநலம்தான். குறிப்பாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷைக் குறிப்பிட வேண்டும்.
“ஒரு தனிப்பட்ட மனிதரால் அந்தக் கட்டடத்தைக் கட்டமுடியாது. இது ஒரு கூட்டு முயற்சி, உழைப்பு. கட்டடப் பணிகள் 80 விழுக்காடு முடிவடைந்த நிலையில் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தலைவராக விஷால் பொறுப்பேற்ற பிறகு எதுவும் செய்யவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியானால் நேரடியாகத் தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. நடிகர் சங்க பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு ஐசரி கணேஷ் சாரும் நடிகர் கார்த்தியும் சந்தித்துப் பேசினர்.
“சங்கத்துக்குள் விஷால் வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார் ஐசரி கணேசன். இதை எப்படி ஏற்கமுடியும்?” என்று தன் நண்பருக்காக வாதிடுகிறார் நந்தா.