சர்ச்சையான கதையை இயக்கும் கங்கனா ரணாவத்

சர்ச்சையான கதையை இயக்கும் கங்கனா ரணாவத்

2 mins read
886231ba-e974-41b3-a63a-f193d4f22444
ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை 'மணிகர்னிகா' என்ற பெயரில் படமாக தயாரித்த நடிகை கங்கனா ரணாவத், இப்போது அயோத்தி ராமர் கோவில் சம்பவம் தொடர்பான காதல் கதையைக்கொண்ட ஒரு திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். படம்: ஊடகம் -

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருப்பவர் தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்.

சில சர்ச்சைகளிலும் அவரின் பெயர் அண்மையில் அதிகமாக சிக்கியது. இதனால் சில எதிர்ப்புகளும் அவருக்கு கிளம்பின. இருந்தபோதிலும் அவர் அதைச் சமாளித்து வருகிறார்.

'மணிகர்னிகா' என்ற சரித்திரக் கதையை இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில் அவர் நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்த அயோத்தி ராமர் கோவில் சம்பவம் தொடர்பாக ஒரு காதல் கதையை திரைப்படமாக எடுக்க இருக்கிறார்.

'அபராஜிதா அயோத்தியா' என்பது படத்தின் தலைப்பு.

கங்கனா இயக்கிய மணிகர்னிகாவுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். இவர் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை. 'பாகுபலி' கதையை எழுதியவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்தைத் தயாரிக்க மட்டும் நினைத்தேன். நான் இயக்கிய முந்தைய படம்போல இதுவும் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படமாகும்.

"இந்தப் படத்தை இயக்கும் எண்ணம் முதலில் எனக்கு இல்லை. வேறு இயக்குநரை, இதற்கு ஒப்பந்தம் செய்ய நினைத்திருந்தேன். நானே இயக்கினால் நன்றாக இருக்கும் என்று சக தயாரிப்பாளர்கள் கூறினார்கள். எனக்கும் அது சரியென்று தோன்றியது.

"சர்ச்சையான படமாக இதை நான் நினைக்கவில்லை. அன்பு, நம்பிக்கை, ஒற்றுமையை வெளிப்படுத்தும் படமாக இந்தக் கதை இருக்கும். எல்லாவற்றையும் கடந்து தெய்வீகத் தன்மையுடன் இருக்கும்," என்று கூறினார்.

சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை 'மணிகர்னிகா' என்ற பெயரில் படமாக தயாரித்தார். அவரே அந்தப் படத்தில் நடித்துக்கொண்டு இறுதிக் காட்சிகளை இயக்கினார். அவர் இயக்கிய காட்சிகள் பலராலும் பாராட்டப்பட்டது. அதனால்தான் கங்கனா ரணாவத் தற்பொழுது இயக்கத்தில் இறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.