இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன், ஆர்யா கூட்டணியில் உருவாகி வருகிறது ‘டெடி’.
திருமணத்துக்குப் பிறகு தன் மனைவி சாயிஷாவுடன் இணைந்து ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது.
இதற்கு முன்பு ‘டிக் டிக் டிக்’ படத்தை இயக்கி உள்ளார் சக்தி சௌந்தர்ராஜன். அச்சமயம் திரையுலகில் நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக அப்படத்தின் வெளியீடு தாமதமானது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி ‘டெடி’ படத்துக்கான கதையை எழுதினாராம்.
“படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான கதாபாத்திரம் தான் ‘டெடி’. அதனால்தான் படத்துக்கும் ‘டெடி’ என்றே பெயர் வைத்தோம். கதைப்படி நாயகன், நாயகி இடையேயான காதல் மிக அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கும். எனவே நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கும் ஒரு ஜோடியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.
“இதையடுத்து ஆர்யா, சாயிஷாவை சந்தித்து கதை சொன்னேன். அப்போது இருவரும் காதலித்து வந்த நேரம். படப்பிடிப்பு தொடங்குவதற்குள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு வகையில் எங்களுக்கும் இது வசதியாகிப் போனது.
“படத்தில் முதல்தோற்றச் சுவரொட்டி, குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு ஆகியவற்றில் சாயிஷாவைக் காணவில்லையே. அவருக்கு சிறு கதாபாத்திரம் தானா என்று சிலர் கேட்கிறார்கள்.
“உண்மையில் அவருக்கும் ஆர்யாவுக்கும் ஜோடியாக பல காட்சிகள் உள்ளன. அது மட்டுமல்ல, சாயிஷாவின் திரை வாழ்க்கையில் இது முக்கியமான படமாக இருக்கும்,” என்கிறார் சக்தி.
தமிழில் வெளியான முதல் ஜாம்பி படம், விண்வெளிப் படம் ஆகியவற்றை இயக்கிய பெருமை சக்திக்கு உண்டு. தற்போது ‘டெடி பேர்’ பொம்மையை முக்கிய பாத்திரமாக வைத்து படம் இயக்குகிறார்.
“படத்துக்குப் படம் ஏதேனும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை நீங்களே ஏற்படுத்திக் கொள்கிறீர்களா?”
“குடும்பத்தோடு வெளியூருக்கு சுற்றுலா செல்வதாக இருந்தால் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு எல்லோரும் அமர்ந்து யோசிப்போம். அதன் பிறகே இடத்தை முடிவு செய்வோம். அதே போல் குடும்பத்துடன் இரவு உணவுக்கு வெளியே செல்வதென்றால், எந்த உணவகத்துக்குப் போவது என்று இரண்டு மணி நேரமாவது யோசிப்போம்.
“நமது நேரம், பணம் வீணாகிவிடக் கூடாது என்று நினைப்பதே இதற்குக் காரணம். அந்த வகையில் ஓர் இயக்குநராக ஒரு படத்துடன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
“அதனால்தான் ஒரு கதைக்காக விருப்பத்தோடு மெனக்கெடுகிறேன். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறேன் என்றால் அதற்கு இந்த மெனக்கெடல் முக்கிய காரணம். இதை அழுத்தம் என்று சொல்வதற்கில்லை,” என்கிறார் சக்தி செளந்தர்ராஜன்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online