சிவகார்த்திகேயன் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது ‘டாக்டர்’. படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் உற்சாகமாக உணர்வதாகச் சொல்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
‘கோலமாவு கோகிலா’வுக்குப் பிறகு இவரது மவுசு கோடம்பாக்கத்தில் அதிகரித்துள்ளது.
‘டாக்டர்’ என்ற தலைப்பையும் முதல்தோற்றச் சுவரொட்டியையும் பார்த்த பலர் இது மருத்துவத்துறை சார்ந்த குற்றங்களை தோலுரித்துக் காட்டும் கதையா என்று கேட்கிறார்களாம்.
‘அப்படி எதுவும் இல்லை’ என்று சொல்லும் நெல்சன், இப்படத்தில் சிவாவின் வழக்கமான நகைச்சுவைதான் சற்று கூடுதலாக இருக்கும் என்கிறார்.
“சிவாவை பொறுத்தவரை மற்றவர்களை சிரிக்க வைத்து மகிழும் கலைஞர். எனவே அவருக்கு ஏற்ற மாதிரி வணிக அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக திரையரங்குக்கு வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு கதையை அமைத்திருக்கிறோம்.
“’வேலைக்காரன்’, ‘ஹீரோ’ போன்று சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட கதையா என்றும் சிலர் கேட்கின்றனர். அப்படிப்பட்ட படங்களை எடுக்க வேண்டுமெனில் முதலில் சமூகத்துக்கு எது தேவை, தேவையில்லை என்பது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
“தற்போதைய சூழலில் அப்படிப்பட்ட படங்களை எடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தவிர தமிழ்ச் சினிமா எப்போதுமே பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட வணிகச் சந்தையாகவே உருவெடுத்துள்ளது. எனவே அப்படிப்பட்ட படங்கள்தான் தேவை.
“ரசிகர்கள் நகைச்சுவையை நம்பியே படம் பார்க்க திரையரங்குக்கு வருகிறார்கள். அவர்களிடம் கருத்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதே இல்லை. அதற்காக தரமற்ற ஒரு வணிகப்படத்தை எடுக்க மாட்டேன்.
“டாக்டர்’ பொழுதுபோக்குப் படமாகத்தான் இருக்கும். இப்படத்தில் இது சரி, அது தவறு என்றெல்லாம் எதையும் விவாதிக்கவில்லை,” என்கிறார் நெல்சன் திலீப்குமார்.
கதைப்படி ஒரு முக்கியமான சம்பவம் நிகழ்கிறது. அதில் ஐந்தாறு பேர் பாதிக்கப்படுகிறார்கள். அச்சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை சுவாரசியமாக விவரிக்குமாம் ‘டாக்டர்’.
படத்தின் முதல் பாதியில் யோகி பாபு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். அர்ச்சனா, இளவரசு, ‘கோலமாவு கோகிலா’ ரெடின் என நிறைய பேர் சிரிக்க வைப்பார்களாம்.
இரண்டாவது பாதியின் சில பகுதிகள் கோவாவில் படமாக்கப்படுகின்றன. அவற்றில் சில புதுமுகங்களும் தங்கள் பங்குக்கு அசத்துவார்களாம்.
‘கோலமாவு கோகிலா’வைப் போலவே இந்தப் படத்திலும் சில கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வகையில் இருக்குமாம்.
‘டாக்டர்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக புதுமுகம் பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவருக்கு நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டாம். மேலும் தெலுங்கு படத்தில் சரண்யா பொன்வண்ணனுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
‘டாக்டர்’ படத்தில் பிரியங்காவை நடிக்க வைப்பது குறித்து இயக்குநர் யோசித்துக் கொண்டிருந்தபோது சரண்யாவை தொடர்புகொண்டு பேசினாராம்.
“அப்போது பிரியங்கா குறித்து சரண்யா நல்லவிதமாக பல விஷயங்களை எடுத்துச் சொன்னார். நடிப்பில் முன் அனுபவம் இருப்பதால் கதைக்கு ஏற்ற நாயகியாக இருப்பார் என்றும் சிபாரிசு செய்தார். அதனால் தயக்கமின்றி ஒப்பந்தம் செய்தோம்.
“வில்லனாக நடிக்க உயரமான நடிகர் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினேன். இதனால் நடிகர் வினய் ஒப்பந்தமானார். ‘துப்பறிவாளன்’ படத்தில் ஏற்கெனவே வில்லனாக நடித்திருப்பது தெரியும். கதையைச் சொன்னவுடன் மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். இப்படிப்பட்டவர்களோடு இணைந்து பணியாற்றுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
“மொத்தத்தில் அருமையான ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்,” என்கிறார் நெல்சன்.
ஏன் சிவாவுடன் முன்பே இணைந்து பணியாற்றவில்லை?
“தொலைக்காட்சியில் பணியாற்றியபோதே நானும் சிவாவும் நல்ல நண்பர்கள். அன்று எப்படி பேசிக் கொண்டோமோ அது போன்றேதான் இன்றளவும் இருக்கிறோம்.
“சிவா இன்னும் மாறவில்லை. உயரங்களை எட்டிப் பிடித்தாலும் எளிமையாக இருக்கிறார். நான் படமெடுக்க தயாராக இருந்தபோது அவர் வேறு எண்ணத்தில் இருந்தார். அதேபோல் அவர் தயாராக இருக்கும்போது நான் வேறு வேலையில் இருந்தேன்.
“இந்நிலையில் திடீரென அவரே தொடர்பு கொண்டு நாம் இணைகிறோம் என்றார். கதையையும் கூட என்னையே தேர்வு செய்யுமாறு கூறிவிட்டார். அவருக்காக மூன்று கதைகளைத் தயார் செய்து வைத்திருந்தேன். அவற்றுள் ஒன்றுதான் இந்தப் படம். நிச்சயம் இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்,” என்கிறார் நெல்சன்.