நடிப்பு, இசை ஆகிய இரண்டுமே தமக்கு முக்கியம் என்று தொடர்ந்து கூறிவந்தாலும் ஷ்ருதிக்கு இசையின் மீதான காதல்தான் சற்று அதிகம் என்று தோன்றுகிறது.
கடைசியாக தமிழில் 'சிங்கம்-3' படத்திலும் இந்தியில் ஒரு படத்திலும் நடித்தவரை அதன்பிறகு சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை.
கடந்த 2017ஆம் ஆண்டு அவ்விரு படங்களும் வெளியான பிறகு இசைத்துறையில்தான் கவனம் செலுத்தி வருகிறார் ஷ்ருதி.
லண்டனில் சில இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தியவர், சில தனிப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார்.
"நான் நடிப்பதில் இருந்து திட்டமிட்டு ஒதுங்கி நிற்பதாக சிலர் கருதுகிறார்கள். அது உண்மையல்ல. நன்கு திட்டமிட்டே எனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
"நடிப்புத் துறையில் எனக்கான இடத்தைப் பெறுவதற்கு உண்மையில் சிரமப்பட்டேன். தொடக்கத்தில் வணிகப் படங்களில் நடித்தபோது அது இனிய அனுபவமாக இருந்தது.
"அதன்பிறகு அத்தகைய படங்களின் மீதான ஆர்வம் குறைந்தது. அதனால் சற்றே பின்வாங்கி என்னை நானே எடைபோட்டுக் கொண்டேன். அதனால் சில இடைவெளிகள் ஏற்பட்டன," என்கிறார் ஷ்ருதிஹாசன்.
ஒரு நடிகையாக தமக்குச் சில விஷயங்கள் திருப்தி அளித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், நடிப்பின் மூலம் லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைந்திருப்பது உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார்.
"லட்சக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நான் முன்னேற்றம் கண்டுள்ளேன்.
"நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்," என்று சொல்லும் ஷ்ருதி, தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் 'லாபம்' படத்திலும் தெலுங்கில் ரவிதேஜா வுடன் 'கிராக்' என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டுமே வணிகப் படங்கள்தான்.
"மீண்டும் வணிகப் படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்றே நினைக்கிறேன்.
"மீண்டும் நடிப்பது உற்சாகமளிக்கிறது. எனது இசைப்பணியும் ஒருசேர நடைபெறும்," என்கிறார் ஷ்ருதி ஹாசன்.

