பாலியல் சீண்டல்கள் காரணமாகவே திரையுலகை விட்டு வெளியேறியதாக அண்மையில் தெரிவித்திருந்தார் நடிகை கல்யாணி.
குழந்தை நட்சத்திரமாக கோடம்பாக்கத்தில் அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து, சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமானார் கல்யாணி. பின்னர் திருமணம் செய்துகொண்டு கணவருடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் திரையுலகில் மீண்டும் காலடி எடுத்துவைக்கவும் மீண்டும் சென்னையில் குடியேறவும் திட்டமிட்டுள்ளாராம்.
"குழந்தை நட்சத்திரமாக இருந்த வரை எல்லாமே விளையாட்டாகப் போனது. திடீரென ஒரு நாள் நீங்கள்தான் கதாநாயகி என்று சொல்லிக்கொண்டு சிலர் வந்தனர். அங்கிருந்துதான் வினை ஆரம்பமானது.
"'ஆகா, நாமும் கதாநாயகியாகி விட்டோம்' என்று மகிழ்ச்சியுடன் நடிக்கத் தொடங்கியபோது படப்பிடிப்பில் ஒரு மாதிரியான கோணத்தில் காட்சிகளைப் படமாக்கினர்.
"அந்த முதல் படம் வெளியாகி திரையில் என்னைப் பார்த்தபோது, வேறு மாதிரியாக வெளிப்படுத்தி இருந்தனர். சினிமாவில் இப்படிக்கூட செய்வார்களா என்று யோசித்தேன்," என்கிறார் கல்யாணி.
அதன்பிறகு பெரிய நிறுவனத்தின் படம் என்று அணுகிய ஒருவர் வாய்ப்புக்காக கொஞ்சம் அனுசரித்துப் போகவேண்டும் என்றாராம். அதன் அர்த்தம் தெரிய வந்தபோது அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என்று தொலைக்காட்சி பக்கம் சென்றதாகச் சொல்கிறார் கல்யாணி.
ஆனால், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் பெரிய அதிகாரிகளும்கூட இதேபோன்று தொல்லை கொடுத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்தான் கல்யாணியின் கணவருக்கு இங்கிலாந்தில் வேலை கிடைத்திருக்கிறது.
'தொலைக்காட்சியும் சினிமாவும்தான் முக்கியம் என்றால் இங்கேயே இருந்துவிடு' என்று கறாராகக் கூறிய கணவர் தான் மட்டுமே இங்கிலாந்து செல்வதற்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாராம்.
"உடனே என் கணவர் தனியாகச் சமைத்து சாப்பிட்டு சிரமப்படுவது போன்ற ஒரு காட்சி மனதில் ஓடியது. இங்கே தவறாக என்னை அணுகும் ஒவ்வொருவரிடமும் என்னால் அனுசரித்துப் போக முடியாது என்று சொல்லி சமாளிப்பதற்குப் பதிலாக, குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று முடிவு செய்து கணவருடன் நானும் இங்கிலாந்து புறப்பட்டு விட்டேன்," என்கிறார் கல்யாணி.
அனுசரித்துப் போகமுடியுமா என்று தம்மிடம் கேட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதில் தமக்கு எந்தவிதப் பிரச்சினையோ, பயமோ இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்த விஷயத்தில் தமது குடும்பத்தார் ஆதரவாக இருப்பதாகவும் சொல்கிறார்.
"நான் வெளியிடும் தகவல்களால் என் குடும்ப வாழ்க்கையில் எந்தவித தாக்கமும் ஏற்படாது. ஆனால். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
"அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அவர்களுடைய வாழ்க்கையும் சேர்ந்து பாதிக்கப்படுமே என்பதால்தான் சில தகவல்களை, பெயர்களை வெளியிட வேண்டாம் என முடிவு செய்தேன்.
"எனது இந்தப் பேட்டியைப் படிக்கும்போது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உறுத்தும் அல்லவா? அதுவே எனக்குப் போதும்," என்று சொல்லும் கல்யாணி விரைவில் சென்னையில் குடியேற இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
மீண்டும் தொலைக்காட்சி, திரைப்படம் என்று வலம்வர விரும்புகிறாராம்.
"ஒரு பணிக்காக வெளிநாடு சென்றதால் அங்கேயே இருந்துவிட முடியுமா? பெற்றோர், உறவினர் என்று எல்லோரும் இங்கேதானே உள்ளனர். அடுத்தடுத்து புது வாய்ப்புகளை உருவாக்கி நகர்வதுதானே வாழ்க்கை? இனியேனும் கசப்பான அனுபவங்கள் திரும்பாது என நம்புகிறேன்," என்கிறார் கல்யாணி.

