நரேஷ் சம்பத் இயக்கத்தில் ஆரவ் நாயகனாக நடிக்கும் படம் ‘ராஜபீமா’. கேரளாவில் பழத்துக்குள் வெடிமருந்து வைத்து ஒரு யானை கொடூரமாக கொல்லப்பட்ட சூழ்நிலையில் யானையை மையப்படுத்தி உருவாகி உள்ளது இப்படம்.
யானை நடிப்பதால் விக்ரம் பிரபுவின் ‘கும்கி’யைப் போல் இருக்குமா? என்று பலரும் கேட்கிறார்களாம். ஆனால் இரு படங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்கிறார் நரேஷ் சம்பத்.
“எம்ஜிஆர் நடித்த ‘நல்ல நேரம்’, ரஜினியின் ‘அன்னை ஓர் ஆலயம்’, கமல்ஹாசனின் ‘ராம் லட்சுமணன்’ல் இருந்து ‘கும்கி’ வரை தமிழ் சினிமாவில் அவ்வப்போது யானையை மையப்படுத்தி படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டுபவர், ‘ராஜபீமா’ அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்,” என்கிறார்.
கொரோனா ஊரடங்குக்கு முன்பே இப்படத்தின் பணிகள் முடிந்துவிட்டனவாம். வெளியீடு காணும் நேரத்தில் ஊரடங்கு காரணமாக எல்லாம் தாமதமாகி விட்டதாம்.
“ஒட்டுமொத்த படக்குழுவும் படத்தைப் பார்த்தாகிவிட்டது. எங்களைப் பொறுத்தவரை எந்தவிதக் குறையும் இல்லாமல் படம் உருவாகி உள்ளது. தொழில்நுட்ப ரீதியில் சிறு பணிகள் மீதமுள்ளன. ஊரடங்கு முடிந்ததும் படம் திரைகாணும்,” என்று சொல்லும் நரேஷ் சம்பத், ஒரு படத்தின் வெற்றியில் அதன் தலைப்புக்கும் பங்குள்ளது என்று உறுதியாக நம்புகிறாராம்.
அதனால் பல நாட்கள் தீவிரமாக யோசித்து ‘ராஜபீமா’ என்ற தலைப்பை உறுதி செய்தாராம். இது முழுநீள பொழுதுபோக்குச் சித்திரமாக உருவாகி உள்ளது.
“நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள் என்று சினிமாவுக்குரிய அனைத்து அம்சங்களையும் குறைவின்றி இடம்பெறச் செய்திருக்கிறார்கள்.
“அதேசமயம் இது காதலை மையப்படுத்தி பின்னப்பட்ட கதை அல்ல. எல்லா அம்சங்களும் அளவோடுதான் இருக்கும்.
“மேலும் சமூகத்துக்குத் தேவையான சில நல்ல கருத்துகளும் நிச்சயம் இருக்கும். அது என்ன என்பதை இப்போதே சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும்,” என்கிறார் நரேஷ்.
கதைப்படி கதாநாயகன் தன் வீட்டிலேயே ஒரு யானையை வளர்ப்பாராம். மனிதனையும் விலங்கையும் உணர்வுபூர்வமாக இணைக்கும் புள்ளிதான் இப்படத்தின் மையக்கருவாம்.
“யானைக்கும் ஆரவ்வுக்கும் இடையேயான காட்சிகள் அருமையாக வந்துள்ளன. இந்தக் கதையை எழுதும்போதே ஆரவ்தான் என் மனதில் இருந்தார். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. இன்றுவரை என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடந்துகொள்கிறார்.
“தாய்லாந்தில்தான் யானை சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்தோம். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு யானையுடன் எப்படிப் பழகவேண்டும் என்று முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார் ஆரவ்,” என்று பாராட்டுகிறார் நரேஷ் சம்பத்.