சென்னை: பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன், மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 87.
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார்.
திரையுலகினர் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரி வித்து வருகின்றனர்.
இவரது மனைவி நடிகை எம்.என். ராஜம். இவர் பல்வேறு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர்.
ஏ.எல். ராகவன் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
1950கள் முதல் 1970கள் வரை தமிழ்த் திரைப்படப் பாடல்களில் கொடிகட்டிப் பறந்தவர் ராகவன்.
1947ஆம் ஆண்டு 'கிருஷ்ண விஜயம்' என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவுக்கு வந்தவர் இவர். 1950ல் வெளிவந்த 'விஜயகுமாரி' என்ற படத்துக்காக ஒரு பாடலைப் பாடினார்.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் 'எங்கிருந்தாலும் வாழ்க' போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களையும் இவர் பாடி இருக்கிறார்.
அத்துடன், 'பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்', 'சீட்டுக்கட்டு ராஜா', 'என்ன வேகம் நில்லு பாமா', 'அங்கமுத்து தங்கமுத்து' உள்பட பல முத்தான பாடல்களைப் பாடியுள்ளார்.
கடைசியாக கடந்த 2014ஆம் ஆண்டு 'ஆடாம ஜெயிச்சோமடா' என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடியிருந்தார்.
இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இவருக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கினர்.

