மின்னிலக்க தளங்களில் புதுப்படங்களை நேரடியாக வெளியிடுவதற்கு திரையங்க உரிமையாளர்களும் விநியோகிப்பாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எனினும் பாலிவுட் தொடங்கி கோடம்பாக்கம் வரை இந்த நடைமுறைக்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வீட்டுக்கு வீடு புதுப்படங்களைக் கொண்டு சேர்க்கும் விதமாக 'டைரக்ட் டு ஹோம்' என்ற முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தார் கமல்ஹாசன்.
'விஸ்வரூபம்' படத்தை இத்தகைய முறையில் வெளியிடவும் அவர் விரும்பினார். ஆனால் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அப்போது முயற்சி கைகூடவில்லை.
அதன் பிறகு இயக்குநர் சேரன் கூட புதுமுயற்சியில் ஈடுபட முயன்று சங்கடங்களைச் சந்தித்தார். ஆனால், கொரோனா ஊரடங்கு என்பது நிலைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த உலகமும் புதிய வர்த்தக சந்தையை நோக்கிப் பார்வையைத் திருப்பி உள்ளது.
கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள திரையரங்க உரிமையாளர்களும் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுப்பவர்களும் ஊரடங்கால் பெரும் தவிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
எனவே, மின்னிலக்கத் தளங்களில் புதுப்படங்கள் வெளியாவதை இனி தடுக்க இயலாது என திரையுலகைச் சேர்ந்த கணிசமானோர் வெளிப்படையாக கூறத் தொடங்கி உள்ளனர்.
தமிழில் அண்மைக் காலத்தில் இதற்கான முதல் அடியை எடுத்து வைத்தவர் சூர்யா. ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' படத்தை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேரடியாக இணையத்தில் வெளியிட்டார் அவர்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' படமும் இணையத்தில் வெளியான நிலையில், மேலும் நான்கைந்து படங்கள் அவ்வாறே வெளியீடு காண வரிசையில் காத்திருக்கின்றன.
இந்தியில் அமிதாப்பச்சன் நடித்துள்ள புதுப்படம், வித்யாபாலன் நடித்த 'சகுந்தலாதேவி', டாப்சி நடித்த 'தப்பட்', ஊர்வசி ரட்லா நடித்த 'வர்ஜின் பானுபிரியா' ஆகிய இந்திப் படங்கள் இணையத்தில் நேரடியாக வெளியீடு காண்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகத் தகவல்.
தென்னிந்திய மொழிகளைப் பொறுத்தவரை, கன்னடத்தில் உருவான 'பிரெஞ்ச் பிரியாணி', மலையாளத்தில் தயாரான 'சூவியும் சுஜாதா'வும், தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள 'கிளைமாக்ஸ்' உள்ளிட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியும் வெளியீடு காணவும் உள்ளன.
"தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இணையம் வழி படங்களை வெளியிடுவது நிச்சயம் நல்லதொரு முன்னேற்றம்.
"இது தற்காலிகமான ஏற்பாடாகவே நடைமுறைக்கு வந்திருக்கிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப் படும்போது நிலைமை மீண்டும் பழையபடி மாறிவிடும் என்பதை திரையரங்க உரிமையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
"தற்போது தவிப்பில் உள்ளவர்களுக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும்," என்று நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.
நடிகை டாப்சியோ ஓடிடியில் படங்கள் வெளியாவது காலத்தின் கட்டாயம் என்கிறார்.
இந்த இக்கட்டான கொரோனா சூழலில் இருந்து சிலர் தப்பிப் பிழைக்க வழி கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
"அதே சமயம் ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளுக்கான மதிப்பு என்றுமே குறையாது. திரையரங்குக்குச் சென்று பார்த்தால்தான் புதுப்படத்துக்கான கொண்டாட்ட அனுபவம் கிடைக்கும். இது அனைவருக்கும் தெரியும்," என்கிறார் டாப்சி.
நடிகை அனுஷ்கா சர்மா கூறுகையில், "இந்தியாவுக்குள் மட்டுமே அறியப்பட்ட பல திறமைசாலிகளையும் படைப்பாளிகளையும் உலக மக்கள் அறிந்துகொள்ள மின்னிலக்க வெளியீட்டு முறை உதவிகரமாக உள்ளது," என்கிறார்.
இதேபோல் மேலும் பல இயக்குநர்கள், நடிகைகள், இணையம் வழி நேரடியாக படங்களை வெளியிட ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மிக விரைவில் மேலும் பல புதுப்படங்கள் இணையத்தில் நேரடியாக வெளியாகக்கூடும்.

