சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திரைப்படங்களில் நடிப்பதில் தமக்கு ஆர்வம் இருந்ததில்லை என்கிறார் கௌதம் கார்த்திக்.
அண்மைய பேட்டி ஒன்றில் 'நானும் ரௌடிதான்' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்காக தாம் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாத்தா முத்துராமன், தந்தை கார்த்திக்கை தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக கோடம்பாக்கத்தில் கால்பதித்த கௌதம் கார்த்திக் நடித்த முதல் படமான 'கடல்' வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துவிட்டன.
"சிறு வயதில் இருந்து திரையுலகத்துடனும் அதைச் சார்ந்தவர்களுடனும் எனக்கு அதிக தொடர்புகள் இல்லை. அதனால் எனது முதல் படத்தில் எத்தனை பெரிய பிரபலங்கள் எல்லாம் பங்கேற்றிருந்தனர் என்பது குறித்து அப்போது பெரிதாக ஏதும் தெரியவில்லை. இப்போது நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.
"மணிரத்னம் சார் இயக்கம், ஏ.ஆர். ரகுமான் இசை, அர்ஜுன் சார், அரவிந்த்சாமி சார் என்று எனது முதல் படத்திலேயே இத்தனை பேருடன் பணியாற்றி இருக்கிறேன்.
"அதேசமயம் இந்தப் பிரமிப்பு படத்தில் நடிக்கும்போது இருந்திருந்தால் பயந்து போயிருப்பேன். ஒருவகையில் சினிமா குறித்து அதிகம் தெரியாததால் அறிமுக படத்தில் சுதந்திரமாக நடிக்க முடிந்தது," என்கிறார் கௌதம்.
தந்தை கார்த்திக் இவருக்கு நடிப்பு குறித்து எந்தவித அறிவுரையும் கூறமாட்டாராம். ஒரே ஒரு முறை 'நீ யாரோ அதை நீ நடிக்கும் கதாபாத்திரத்துக்குள் கொண்டுவா. அப்போதுதான் உயிர்ப்பு இருக்கும். நீ செய்யும் தவற்றை நீயே சரி செய்தால்தான் வளர முடியும்' என்றாராம் கார்த்திக். இன்றுவரை அதை மட்டுமே பின்தொடர்வதாகச் சொல்கிறார் கௌதம்.
'சிலம்பாட்டம்' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் கௌதமும் லட்சுமி மேனனும் இணைந்து நடித்த படம் 'சிப்பாய்'. கடந்த சில ஆண்டுகளாக இப்படத்தை வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கிறது. அதற்கான காரணம் என்ன?
"அப்படத்தின் 95 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளுக்கான படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு, பின்னணிக் குரல் பதிவு என்று எல்லாமே முடிந்துவிட்டன. இப்படத்தின் இறுதிக் காட்சியை மட்டுமே படமாக்க வேண்டும். ஆனால் தயாரிப்பாளருக்கு இருந்த சில சொந்தப் பிரச்சினைகள் காரணமாக திடீரென படத்தைக் கிடப்பில் போட்டு விட்டனர்.
"ஆனால், இன்றுவரை தயாரிப்பாளர், இயக்குநர் இருவரிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் தயார் என்றால் நானும் தயாராகி விடுவேன்," என்று சொல்லும் கௌதம், கித்தார் வாசிப்பதில் கெட்டிக்காரராம். தனக்கு ஓரளவு நன்றாக பாடவும் வரும் என்கிறார். ஆனால், இதுவரை தாம் நடித்த படங்களின் இசையமைப்புப் பணிகளில் அறவே தலையிட்டதில்லை என்றும் சொல்கிறார்.
"கடவுள் ஆசீர்வாதத்தால் எனது படங்களுக்கு பெரிய இசையமைப்பாளர்கள் அமைந்தனர். 'முத்துராமலிங்கம்' படத்துக்கு இளையராஜா, 'கடல்' படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான், 'வை ராஜா வை' படத்துக்கு யுவன் சங்கர், 'என்னமோ ஏதோ'வுக்கு இமான் என்று அனைவருமே பல நல்ல பாடல்களைக் கொடுத்துள்ளனர்," என்று சொல்லும் கௌதம், தாம் நடிக்காமல் கைவிட்ட வெற்றி பெற்ற படங்கள் பல என்கிறார். 'நானும் ரௌடிதான்' படமும் அவற்றில் ஒன்றாம்.
"ஒவ்வொரு நடிகருக்கும் இதுபோன்று நடிக்கத் தவறிய படங்களின் பட்டியல் இருக்கும். சில படங்களை ஏன்விட்டோம் என்று வருத்தம் ஏற்படும். சில படங்களைக் கைவிட்டதற்கு மகிழ்ச்சி அடைவோம். ஒரு படத்தில் நடிக்க மறுத்து அதற்காக நான் சற்றும் வருத்தப்படவில்லை என்றால் அது 'நானும் ரௌடிதான்'.
"காரணம் நான் நடிக்காததால்தான் விஜய் சேதுபதி அண்ணாவிடம் அந்த வாய்ப்பு சென்றது. அவர் நடித்ததால்தான் படம் வெற்றி பெற்றது. நான் நடித்திருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமில்லை. எனவேதான் அந்த வாய்ப்பை இழந்ததற்காக இன்றுவரை மகிழ்ச்சியாக உணர்கிறேன்," என்கிறார் கௌதம் கார்த்திக்.

