முன்பெல்லாம் நடிகைகளுக்கு இடையே பலத்த போட்டி இருப்பதாக தொடர்ந்து தகவல் வெளியாகும். ஒரு நடிகை மற்றொரு நடிகையின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிப்பதாகவும் புகார்கள் எழும்.
ஆனால் இப்போது இதில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மூன்று நாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
ஒரு நடிகை தனக்குப் பதிலாக இன்னொரு நடிகையைப் பரிந்துரைக்கும் ஆச்சரியமும் நிகழ்கிறது. ஒருவருக்கொருவர் மனதாரப் பாராட்டிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் 'பெண்குயின்' படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பிரமாதம் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
அண்மையில் இணையத்தில் நேரடியாக வெளியீடு கண்டது 'பெண்குயின்'. ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்நிலையில் இருதினங்களுக்கு முன்புதான் இப்படத்தைப் பார்த்தாராம் ராஷ்மிகா. படம் மிகவும் பிடித்துப்போகவே உடனடியாக தமது கருத்தை சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
"நேற்று இரவுதான் 'பெண்குயின்' படத்தைப் பார்த்தேன். கீர்த்தி சுரேஷ் நடிப்பு கச்சிதமாக இருந்தது. எப்போதும் போலவே அருமையாக நடித்துள்ளார்.
"இந்தப் படம் அனைத்து தாய்மார்களுக்கும் பொருத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்கையும் கார்த்திக் சுப்புராஜ் சாரையும் தனியாகப் பாராட்ட வேண்டும்," என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
அதுமட்டுமல்ல, கடந்த இரு தினங்களாக தன்னைத் தொலைபேசி வழி தொடர்புகொண்ட பலரிடமும் இப்படத்தை தவறாமல் பார்க்கும்படி சிபாரிசு செய்து வருகிறாராம்.
ராஷ்மிகா நடித்த நேரடித் தமிழ்ப் படம் இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் வருத்தமாக உள்ளனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு வேளையின்போது இரண்டு தமிழ் இயக்குநர்கள் கூறிய கதைகள் ராஷ்மிகாவுக்கு மிகவும் பிடித்திருக்கிறதாம்.
எனவே, அந்த இரண்டு படங்களிலும் அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாகக் கூறப்படுகிறது.

