நடிகர் விஜய் தமது இயக்கத்தில் நடிக்க முன்வந்தபோது அதைப் பயன்படுத்திக் கொள்ளாதது வாழ்க்கையில் தாம் செய்த மிகப்பெரிய தவறு என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
'தவமாய் தவமிருந்து' படத்தை இயக்கியபோதுதான் இவரது இயக்கத்தில் நடிக்க முன்வந்தாராம் விஜய். எனினும் அப்படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்பதால் விஜய்யை வைத்துப் படம் இயக்க முடியாமல் போனதாம்.
"விஜய்யை நேரில் சந்திக்கும்போது இதற்காக வருத்தம் தெரிவித்து எனது நிலையைப் புரியவைப்பேன்.
"முன்பு 'ஆட்டோகிராப்' கதையை விஜய்யிடம் மூன்று மணி நேரம் விவரித்தேன். ஒரு சிறு அசைவுமின்றி தொலைபேசி குறுக்கீடுகளின்றி என் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு பொறுமையாகக் கதை கேட்டார்.
"ஒருமுறை குடிக்கத் தண்ணீர் வேண்டுமா என்று மட்டும் என்னை நோக்கிக் கேட்டார். கதையில் தான் அவரது முழுக் கவனமும் இருந்தது. இந்த அர்ப்பணிப்புதான் அவர் உயரங்களை எட்டிப்பிடிக்க காரணம்," என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

