திறமைசாலிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை நடிகை மஞ்சிமா மோகன் உருவாக்கி இருப்பது தெரியும். தற்போது அந்த அமைப்புக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவின் போக்கு குறித்தும் தாம் நடித்துவரும் படங்கள் குறித்தும் பல விஷயங்களைத் தெரிவித்துள்ளார் மஞ்சிமா.
தற்போது தமிழில் ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கருடன் நடித்து வருபவர், ‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதியுடனும், ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் விஷ்ணு விஷாலுடனும் இணைந்துள்ளார்.
“எஃப்.ஐ.ஆர். படத்தில் எனக்கு வழக்கறிஞர் கதாபாத்திரம். ஏற்கனவே ‘தேவராட்டம்’ படத்திலும் வழக்கறிஞராக நடித்துள்ளேன்.
“ஆனால், அதில் சாதாரணமாக வந்து போவேன் எனில், ‘எப்ஃ.ஐ.ஆர்’ல் கதாநாயகனுடன் சம்பந்தப்பட்ட முக்கியமான தருணங்களில் எனது கதாபாத்திரமும் இடம்பெற்றிருக்கும்,” என்று சொல்லும் மஞ்சிமா, திரையரங்கு சென்று படம் பார்ப்பதுதான் அதிக உற்சாகம் தரும் என்கிறார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக இணையம் வழி படங்களை வெளியிடுவது தற்காலிகமான ஏற்பாடாக இருந்தால் நல்லது என்பதுதான் இவரது கருத்தாம்.
“ஒரு படத்தை திரையரங்கில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவத்தை இணையம் வழி படம் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவத்துடன் ஒப்பிட முடியாது.
“விஜய் நடிக்கும் புதுப் படத்தின் முதல் காட்சியை இணையத்தில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
“முதல் நாள், முதல் காட்சி அதிலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பார்க்கும் அனுபவம் அலாதியானது.
“அதேசமயம் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பென்குயின்’ ஆகிய படங்கள் அதிரடியாக இணையத்தில் வெளியீடு கண்டிருப்பதையும் மறுக்க இயலாது,” என்று சொல்லும் மஞ்சிமா, ‘பெண்களை மையப்படுத்தி’ என்று கூறி படங்களை விளம்பரப்படுத்துவது தமக்கு அறவே பிடிக்காது என்கிறார்.
ஒரு கதையை உருவாக்கும்போது, அதைப் படமாக்கும்போது பெண் கதாபாத்திரங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் அவையும் ரசிகர்களால் பேசப்படும் என்கிறார்.
“பெண்களை மையப்படுத்திய படம் என்று சொல்வது சரியல்ல. பெரிய கதாநாயகன் இருந்தாலும்கூட ஒரு நடிகையால் ஒரு படத்தை தன் தோள்களில் சுமக்க முடியும். உதாரணத்திற்கு ‘நானும் ரௌடிதான்’ படம் நயன்தாரா இல்லாமல் முழுமை அடையாது. அதேபோன்று ‘விண்ணைத் தாண்டி வருவாயா’வில் திரிஷாவின் கதாபாத்திரத்தைக் குறிப்பிடலாம். அந்தக் கதை அவரது கதாபாத்திரத்தை வைத்துத்தான் நகரும்.
“ஒரு பெண் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிப்பதால் மட்டுமே அது பெண்களை மையப்படுத்தும் படமாகி விடாது என நான் நம்புகிறேன். ஆண், பெண் என இருவருக்குமே சமமான முக்கியத்துவம் இருக்கும் பட்சத்தில் அதைப் பெண்களை மையப்படுத்திய படம் என்று தயக்கமின்றிச் சொல்ல முடியும்,” என்கிறார் மஞ்சிமா மோகன்.
இவரது சொந்த ஊர் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், வளர்ந்து ஆளான பிறகு அதிக எண்ணிக்கையிலான மலையாளப் படங்களில் நடிக்கவில்லை.
ஒருவேளை தமிழில் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் தாம் நடித்த மலையாளப் படங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும் என்கிறார்.
“மலையாளத்தில் ‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்தில் நடித்து முடித்ததும் ‘அச்சமென்பது மடமையடா’ பட வாய்ப்பு தேடிவந்தது. அதற்காக அதிக நாட்கள் கால்ஷீட் ஒதுக்க வேண்டும் என்று இயக்குநர் கௌதம் மேனன் கூறிவிட்டார்.
“இதேபோல் தான் நடித்த இதர தமிழ் படங்களுக்காகவும் அதிக நாட்கள் கால்ஷீட் தரவேண்டி இருந்தது. இதனால்தான் மலையாளப் படங்களில் அதிகம் நடிக்க முடியவில்லை.
“எனினும் 2018ல் நிவின் பாலியுடன் ஒரு மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது தயங்காமல் ஒப்புக்கொண்டேன். இத்தனைக்கும் அதில் ஐந்தாறு காட்சிகள் மட்டுமே வந்து போவேன். ஆனாலும் மலையாளத்தில் நடித்த திருப்தி கிடைத்தது. எந்த மொழியாக இருந்தாலும் என் திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பேன். எனக்கு எதிலும் அவசரம் இல்லை,” என்கிறார் மஞ்சிமா மோகன்.