வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயிலுக்காக’ எனும் படத்துக்காக தனுஷுடன் இணைந்து ‘காத்தோடு காத்தானேன்... கண்ணே உன் மூச்சானேன்’ என்ற பாடலை அசத்தலாகப் பாடியுள்ளார் அதிதி ராவ்.
ஒருபக்கம் நடிகை, மற்றொரு பக்கம் பாடகி என இரண்டு பணிகளையும் எந்த ஒரு குறையுமில்லாமல் நேர்த்தியாகச் செய்து வருகிறார் இந்த இளம் நாயகி.
தற்போது ‘பொன்னியின் செல்வன்’, நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் முதல் படமான ‘ஹே சினாமிகா’ என தமிழில் இரு படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் அதிதிக்கு அண்மைய மகிழ்ச்சி என்றால் அது மலையாளத்தில் ஜெயசூர்யாவுடன் இணைந்து நடித்த ‘சூஃபியும் சுஜாதாவும்’ படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு கண்டது தானாம்.
திடீரென பின்னணி பாடுவதில் ஆர்வம் வந்திருக்கிறதே? என்று கேட்டால் நம்மை முறைக்கிறார் அதிதி. இவரது குடும்பமே ஒரு இசைக் குடும்பம்தானாம்.
“அம்மா அருமையாகப் பாடுவார். அதிகாலையில் தூங்கி எழும்போதே தம்புரா தாலட்டும். அதை வாசித்துக்கொண்டே அம்மா மனதை வருடும் குரலில் பாடிக் கொண்டிருப்பார்.
“அவரைப் பார்த்து நானும் சாதகம் செய்யத் தொடங்கினேன். வீட்டில் உள்ள அனைவருக்குமே இசையில் ஈடுபாடு உண்டு.
“பள்ளி நாட்களில் நானும் சும்மா இருந்ததில்லை. அதிகாலையில் எழுந்து நடன வகுப்புக்குப் போவேன். இப்போது என் குரலை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு அம்மாதான் காரணம்.
“கூடவே என்னை அறிமுகப்படுத்திய ஏ.ஆர். ரகுமான் சாருக்கும் அதில் பங்குண்டு,” என்று சொல்லும் அதிதி இயற்கையின் ரசிகையாம்.
சிறுவயதில் அதிகாலையில் எழுந்திருக்கும்போது சூரிய உதயத்தை சில நிமிடங்களாவது கண்டு ரசிப்பாராம். இவர் பிறந்தது ஹைதராபாத்தில் என்றால் வளர்ந்தது மும்பையில்தானாம்.
அதிதியின் பாட்டியும் தாயாரின் குடும்பத்தாரும் இன்னமும் ஹைதராபாத்தில்தான் உள்ளனர். இவரது பாட்டி ஓர் எழுத்தாளராம். அதைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்.
மும்பையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர் மம்முட்டியுடன் ‘பிரஜாபதி’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும் அதிதிக்கு தெலுங்கில் சரளமாகப் பேச வராது. ‘காற்று வெளியிடை’ படம்தான் தன் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்.
மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததும் நேரில் சென்றாராம். இரண்டு, மூன்று காட்சிகளை விவரித்து நடிக்குமாறு மணிரத்னம் கேட்டுக்கொள்ள, சிறப்பாக நடித்ததால் அன்றைய தினமே நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார் மணிரத்னம். அந்த நாளை வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது என்கிறார்.
உண்மையான காதலில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிடுபவர், அத்தகைய காதலை மட்டும் மதிப்பதாகச் சொல்கிறார்.
“உண்மையாக காதலிப்பவர்களால் எந்தவித சிரமமுமின்றி ஒரே அறையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசமுடியும். மனதைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
“என்னைப் பொறுத்தவரை வதந்திகளையும் கிசுகிசுக்களையும் கண்டுகொள்வதே இல்லை. முன்பெல்லாம் சில கிசுகிசுக்கள் மனதைக் காயப்படுத்தும். இப்போது ஏதேனும் கிசுகிசுக்களைக் கேள்விப்பட்டால் புறக்கணித்து விடுவேன்.
“தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகிலும் எப்போது முதலிடத்தைப் பிடிக்கப் போகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அதற்கு என்னிடம் பதில் இல்லை.
“எனினும் என்னையும் மதித்து இப்படியொரு கேள்வியைக் கேட்கத் தோன்றியதே, அதற்காக அவர்களுக்கு என் நன்றி. எனக்கு முதலிடம், இரண்டாம் இடம் என்பதில் எல்லாம் பெரிய விருப்பம் இ்ல்லை. என்னைத் தேடிவரும் எல்லா வாய்ப்பு களுமே மகிழ்ச்சி தருகின்றன. காரணம் என் திறமை மீது ஒருசிலர் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக தேடி வரும் வாய்ப்புகள் அவை.
“எனவே அவற்றை ஏற்று அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் நடித்து வருகிறேன். இதுவே எனக்கு மனநிறைவைத் தருகிறது.
“சிலருக்கு அதிக சம்பளத்தின் மீதும் சிலருக்கு விருதுகள் மீதும் ஆர்வம் இருக்கும். எனக்குப் பெரிய இயக்குநரின் படத்தில் நல்ல கதையில் நடிப்பதே பெரிய கௌரவம். அதுபோதும்,” என்று பக்குவமாகப் பேசும் அதிதி ராவ் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த சில உதவிகளைச் சத்தமின்றிச் செய்து வருவதாகத் தகவல்.