இந்தி நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் இந்தியத் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தி நாயகர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுஷாந்த் சிங் பல வகையிலும் திரையுலகத்தினரால் புறக்கணிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவிலும் இத்தகைய பிரச்சினை இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
மற்ற திரையுலகங்களுடனும் ஒப்பிடுகையில் தமிழ்ச் சினிமாவில் கதாநாயகர்களுக்கு இடையே எந்தவித அரசியலும் இல்லை என்கிறார் பிரபல தயாரிப்பாளரும் இயக்கு நருமான கேயார்.
ஆனால், கோடம்பாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்களுக்கு இடையேதான் பிரச்சினைகளும் பாதிப்புகளும் அதிகம் என இவர் அதிர்ச்சி குண்டு போடுகிறார்.
ரஜினியின் ‘தில்லுமுல்லு’, கமலின் ‘ராம் லட்சுமணன்’ உட்பட ஏராளமான படங்களை விநியோகித்த அனுபவம் கொண்டவர் இவர். மேலும் திரைத்துறை சார்ந்த பல சங்கங்களிலும் முக்கியப் பொறுப்பு களை வகித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர்கள் அஜித், சூர்யா கார்த்திக் மீது கேயார் சில புகார்களை அடுக்குகிறார். அவரது அண்மைய பேட்டி கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
“பொதுவாக குறிப்பிட்ட ஒரு துறையில் ஒருவர் முன்னேறும்போது அந்தத் துறைக்கு என்ன கைமாறு செய்யப் போகிறார் என்று பார்க்கவேண்டும். தங்களை ஏற்றிவிட்ட ஏணிக்கு ஏதாவது செய்யவேண்டும் எனும் நினைப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கும் இருக்க வேண்டும். ஒரே குடும்பம் என்றாலும் ரஜினியும் தனுஷும் வெளித் தயாரிப்பாளர்களுக்குத்தான் தங்கள் படங்களைக் கொடுக்கிறார்கள். ஆனால் சிவகுமார் குடும்பம் அப்படிச் செய்வதில்லை.
“சூர்யா, கார்த்தி, ஜோதிகா என்று அவர் குடும்பத்தில் மூன்று நட்சத்திரங்கள் உள்ளனர். எனினும் மீண்டும் மீண்டும் தங்கள் சொந்தத் தயாரிப்பில்தான் மூவரும் நடிக்கின்றனர். லாபத்தையும் தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்கின்றனர்.
“சிவகுமார் எனும் நடிகரை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு இதனால் எந்தவிதப் பயனும் இல்லை. சிவகுமாரால்தான் அவர்கள் மூவரும் உருவாகி உள்ளனர். இதை அந்தக் குடும்பம் எப்போதாவது நினைத்துப் பார்க்கவேண்டும்,” என்கிறார் கேயார்.
மேலும் நடிகர் அஜித் தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூருக்கு மட்டும் கால்ஷீட் கொடுப்பது அதிருப்தி அளிப்பதாகவும் சொல்கிறார்.
“ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் போனி கபூருக்கு கால்ஷீட் கொடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்தார் அஜித். அடுத்து ‘வலிமை’யையும் போனிகபூர் நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஏன் தமிழில் வேறு தயாரிப்பாளர்கள் இல்லையா? அஜித்தை உருவாக்கி, வளர்த்துவிட்ட எத்தனையோ தயாரிப்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாமே?
“ஒரே ஒரு நிமிடமாவது நாம் எங்கிருந்து வந்தோம்? எப்படி வளர்ந்தோம் என்பதை அஜித் நினைத்துப் பார்க்கவேண்டும். அவர் தன் மனசாட்சியைத் தட்டிக் கேட்கட்டும்,” என்கிறார் கேயார்.
இந்த விஷயத்தில் கமல், விஜய்யைக் குற்றம் சொல்லமுடியாது என்று குறிப்பிடுபவர், விஜய் பல தயாரிப்பாளர்களைத் தாமே அழைத்து வாய்ப்புக் கொடுப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இதெல்லாம் சொல்லிக் கொடுத்து, அல்லது கட்டாயத்தின் பேரில் வருவதல்ல. மனிதாபிமான அடிப்படையில் செயல்பட வேண்டும். இப்போது சிவகார்த்திகேயன் வரை பல நடிகர்கள் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளனர். இனி வரும் காலம் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.
“கதாநாயகர்களே தாயாரிப்பளர், இயக்குநர்களைத் தேர்வு செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களுக்கு ஒத்துவரவில்லை என்றால் அனைத்தையும் சொந்தமாகவே பார்த்துக் கொள்கிறார்கள்,” என்று கேயார் சொல்வதை ஒரு தரப்பினர் பலமாக ஆதரிக்கின்றனர்.
ஏற்கெனவே கதாநாயகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே நாயகர்கள் கால்ஷீட் தருவது, தங்கள் சொந்த நிறுவனத்தை மட்டுமே வைத்து படம் தயாரிப்பது ஆகியவை புது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.