இந்தாண்டு தனது பிறந்தநாளை அமைதியாக கடந்து சென்றுள்ளார் ஹரிஷ் கல்யாண். ஜூன் 29 அவரது பிறந்த நாள்.
வழக்கமாக அன்றைய தினம் நண்பர்களுடன் உற்சாகமாக பொழுது கழியுமாம். இந்தாண்டு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்.
“எனது நண்பர்களில் ஒன்றிரண்டு பேருக்கு ஏப்ரல், மே மாதங்களில் பிறந்தநாள் வரும். நண்பர்கள் அனைவருமே யாருக்குப் பிறந்தநாள் வந்தாலும் நன்றாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் வெளியே தலைகாட்ட முடியவில்லை,” என்கிறார் ஹரிஷ்.
எப்படியும் ஜூன் மாதம் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் தம் பிறந்தநாளையாவது நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடுவோம் என்றும் திட்டமிட்டிருந்தாராம்.
“ஆனால் இப்போதும் நிலைமை சீரடையவில்லை. அதனால் நானும் ஊரடங்குக்கு மத்தியில்தான் பிறந்தநாளை எதிர்கொண்டுள்ளேன். வழக்கமாக பிறந்தநாளையொட்டி நண்பர்கள் திடீரென வீட்டுக்கு வந்து ஆச்சரியப்பட வைப்பார்கள். இந்த முறை அப்படிச் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
“மாறாக, நான் நேரில் வந்து சந்திப்பதாக கூறியிருந்தேன். எப்படியோ பிறந்தநாள் அன்று காலை நண்பர்கள் சிலருடன் கைபேசி காணொளி வசதி மூலம் உரையாட முடிந்தது,” என்று சொல்லும் ஹரிஷ், பொதுவாக தமது பிறந்தநாளின்போது ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது வழக்கமாம்.
ஆண்டு முழுவதும் வாய்ப்பு அமையும் போதெல்லாம் இந்த நல்ல காரியத்தைச் செய்வதுண்டு என்றாலும் பிறந்தநாளன்று உணவு அளிப்பதைக் கட்டாயமாக வைத்துள்ளார்.
“இம்முறை நேரில் சென்று ஆதரவற்றவர்களைச் சந்திக்க முடியவில்லை. அதனால் சில சமூக அமைப்புகளுக்கு வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளேன். உலகம் கொரோனா கிருமியின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் ஹரிஷ்.