ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ‘அண்ணாத்த’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைகாண வாய்ப்பில்லை என புதுத்தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கொரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தாண்டு முழுவதும் படப்பிடிப்பு நடத்தவேண்டாம் என ரஜினி அப்படத்தின் தயாரிப்புத் தரப்பிடம் வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’. இந்தாண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் காரணமாக படப்பிடிப்பு தடைப்பட்டது.
பின்னர் கொரோனா தாக்கம் முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்பு துவங்கும் என்றும் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று படம் வெளியீடு காணும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆண்டு இறுதிவரை படப்பிடிப்பை நடத்தவேண்டாம் என்றும் நிலைமை சீரடையும் பட்சத்தில் 2021ஆம் ஆண்டின் முற்பாதியில் படப்பிடிப்பை நடத்தலாம் என்றும் ரஜினி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஜினியின் இந்த முடிவுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தார் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்.
இதேபோல் ‘வலிமை’ படப்பிடிப்பை ஆண்டு இறுதி வரை ஒத்தி வைக்குமாறு நடிகர் அஜித்தும் கேட்டுக் கொண்டுள்ளாராம். தயாரிப்பாளர் போனி கபூர் இதற்கு ஒப்புக்கொண்டதாகத் தகவல்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.