கடந்த சில வாரங்களாக இணையம் வழி தமிழ் கற்று வருகிறாராம் இளம் நாயகி ராஷி கண்ணா.
இந்தியாவில் ஊரடங்கு முடிவுக்கு வரும்போது தாம் நடிக்கும் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கும் அளவுக்கு தமிழில் சரளமாகப் பேசமுடியும் என்று நம்புகிறாராம்.
"பல மொழிகளில் நடித்துவரும் நிலையில் ஏன் தமிழை மட்டும் கற்றுக்கொள்கிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். காரணம், தமிழில்தான் தற்போது அதிக படங்களில் நடிக்கிறேன். கடந்த இரு மாதங்களில் மட்டும் தொலைபேசி வழியாக பல கதைகள் கேட்டுவிட்டேன். அவற்றுள் சிலவற்றில் நடிக்கவும் முடிவு செய்துள்ளேன்.
"எனவே, தமிழில் நடிக்கவேண்டுமானால், அம்மொழியை நன்கு தெரிந்துகொண்டு நடிப்பதுதான் நல்லது எனத் தோன்றியது. மொழி தெரிந்திருந்தால்தான் சில கதாபாத்திரங்களில் ஆத்மார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்த முடியும்," என்கிறார் ராஷி கண்ணா.
ஊரடங்கின் தொடக்கத்தில் அதைக் கடந்து செல்வது எளிதாகத் தோன்றியது என்று குறிப்பிடுபவர், நாட்களின் போக்கில் அது எவ்வளவு சிரமம் என்பதைப் படிப்படியாக உணர முடிகிறது என்கிறார். தற்போது வீட்டு வேலைகள் அனைத்தையும் இவரேதான் செய்கிறாராம். தவிர, உடற்பயிற்சி செய்வது, பழைய திரைப்படங்களைப் பார்ப்பது என்று பொழுது கழிகிறதாம்.
"நேரம், காலத்துக்கு நான் எப்போதுமே உரிய மரியாதை கொடுப்பேன். நேரத்தை வீணடிக்கக்கூடாது என்பதுடன் அதை நல்லவிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பேன். அப்படிப்பட்ட என்னை கொரோனா வீட்டுக்குள் முடக்கிப் போட்டுள்ளது.
"இதனால் நீண்ட யோசனைக்குப் பிறகு சில முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி வருகிறேன். அதில் ஒன்றுதான் இணையம் வழியிலான தமிழ் வகுப்பு. எனக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் அந்தக் குறைக்குத் தீர்வு கண்டுள்ளேன்," என்று சொல்லும் ராஷி தற்போது கித்தார் வாசிப்பது, ஆன்மீகப் புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறாராம். சித்தார்த்துடன் 'சைத்தான் கே பச்சா', 'அரண்மனை 3' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
"சித்தார்த்துடனான படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சியை மட்டுமே படமாக்க வேண்டி உள்ளது. கொரோனா விவகாரம் முடிவுக்கு வந்த கையோடு இப்படம் வெளியாகும் என நம்புகிறேன். சித்தார்த் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் போலவே இயக்குநர் கார்த்திக்கும் நல்ல திறமைசாலி. இந்தப் படம் ரசிகர்களுக்குப் புதுவித அனுபவத்தைக் கொடுக்கும்.
"அதேபோல் இயக்குநர் சுந்தர் சி. சாரின் படங்களை ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவரது படம் என்றால் சிரித்துக்கொண்டே இருக்கலாம். 'அரண்மனை' படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அதிலும் ஆர்யாவுடன் இணைந்து நடிப்பது கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. மேலும் பா. விஜய் சாருடன் இணைந்து பணியாற்ற இருப்பதும் எனக்கு உற்சாகமளித்திருக்கிறது," என்று துள்ளலுடன் சொல்கிறார் ராஷி கண்ணா.
தற்போது இன்ஸ்டகிராமில் இவரை 5 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து காணொளிப் பதிவுகள், புகைப்படங்கள், சமூகக் கருத்துக்கள் ஆகியவற்றைப் பதிவிட்டு வருகிறாராம். தமிழில் தமக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்று சொல்லும் ராஷி, தான் இதுவரை நான்கு தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்திருப்பதாகச் சுட்டிக் காட்டுகிறார்.
"தமிழ் ரசிகர்களின் இந்தக் குறைவில்லாத அன்புக்காகவே மேலும் பல தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் எனும் விருப்பம் என் மனதில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் ரசிகர்கள் என்மீது அன்பைப் பொழிகிறார்கள். பொது இடங்களுக்குச் செல்லும்போது என்னைப் பாசத்துடன் பெயர் சொல்லி அழைப்பது, கூட்டமாக புகைப்படம் எடுத்துக்கொள்வது என்று அவர்கள் அன்பை வெளிப்படுத்தும் விதத்தைப் பார்க்கும்போது நான் ஆசிர்வதிக்கப்பட்ட பெண்ணாக உணர்கிறேன். இந்த அன்புக்காக ரசிகர்களுக்கு நன்றி," என்கிறார் ராஷி கண்ணா.

