உருவகேலிக்கு ஆளாகியிருக்கிறார் சிறந்த நடிகைகளுள் ஒருவரான நித்யா மேனன்.
”குண்டாக இருந்தால் குஷ்பு அழகு. ஒல்லியாக இருந்தால் சிம்ரன் அழகு,” என்பதுதான் கடந்த 1990களில் தமிழ் சினிமா ரசிகர்களின் நடிகைகளுக்கான அழகின் இலக்கணமாக இருந்தது.
முன்பெல்லாம் “வட இந்திய ரசிகர்களுக்கு சினிமா கதாநாயகிகள் ஒல்லியாக இருந்தால்தான் பிடிக்கும். தென்னிந்திய ரசிகர்களுக்கு சதைப்பிடிப்பான நடிகைகளைத்தான் பிடிக்கும்,” என்று சொல்லப்பட்டது.
அதற்கு தென்னிந்தியப் பெண்கள் சதைப்பிடிப்பான பெண்களாகவே திகழ்ந்ததை உளவியல் ரீதியான காரணமாகச் சொல்லுவார்கள்.
ஆனாலும் கொடியிடையும் கட்டுடலும் கொண்ட கதாநாயகிகள்தான் பெரும்பாலும் விரும்பப்பட்டார்கள்.
அதேசமயம் குண்டான நடிகைகளாலும் முன்னணி நடிகைகளாக திகழமுடியும் என்பதை சாவித்திரி, கே.ஆர்.விஜயா, குஷ்பு போன்றவர்கள் ஒவொரு காலகட்டத்திலும் நிரூபித்தனர்.
இப்போதும் கூட ஒல்லி திரிஷாவைவிட, கொஞ்சம் சதைப்பிடிப்பான நயன்தாராதான் முதலிடத்தில் இருக்கிறார்.
‘வசந்தமாளிகை’ வாணிஸ்ரீயின் கொடியிடையும், கொண்டையும் ரசிகர்களால் மட்டுமல்ல ரசிகைகளாலும் கொண்டாடப்பட்டண.
ஒருமுறை சென்னை விமான நிலையத்தில் தற்செயலாக வாணிஸ்ரீயைப் பார்த்த சாவித்திரி “நீங்கள் சாப்பிடுவீங்களா இல்லையா? அடுத்தமுறை நான் உங்களைப் பார்க்கும்போது சதைப்பிடிப்போட இருக்கணும்...” எனச் செல்லமாக கண்டித்திருக்கிறார்.
ஆனால் கதாநாயகியாக நடிக்கும் பருவத்திலிருந்து மாறிய பிறகே வாணிஸ்ரீ குண்டானார். ஒல்லியாக இருப்பதுதான் தனக்கு வெற்றி என்பதை தெரிந்துவைத்திருந்தார் வாணிஸ்ரீ.
ஆனால் பாலிவுட்டில் உடல் பெருத்த நாயகிகளுக்கு எப்போதுமே இடமில்லாமல் இருந்தது. அதை முறியடித்து முன்னணி நாயகிகளுள் ஒருவராகத் திகழ்பவர் வித்யாபாலன்.
ஆனால் குண்டான நடிகைகளைப் பார்த்து செய்யப்படும் ’உருவகேலி’களுக்கு பலமுறை இலக்காகியிருக்கிறார் வித்யா.
இருந்தாலும், “நான் தென்னிந்திய (கேரள) பூர்வீகப் பெண். என் உடல்வாகு அப்படித்தான் இருக்கும். என் உருவத்தை பார்க்காதீர்கள். ஏற்றுக்கொள்கிற பாத்திரத்தில் நான் என் நடிப்பை, என் பாணியை எப்படி வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றுதான் நீங்கள் பார்க்கவேண்டும்.
“என் திறமையை நீங்கள் விமர்சிக்கலாம். அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கு. நான் ஒல்லியாக இருக்க வேண்டுமா, குண்டா இருப்பதா என்பதை நான்தான் முடிவுசெய்வேன்,” என உருவகேலி செய்தவர்களுக்குப் பதிலடி தந்தார் வித்யா.
கொஞ்சம் சதைப்பிடிப்பானவர்களுக்கு சாதகமான அம்சம் சின்னப் பயிற்சி மூலம் உடலை சொன்னபடிக்கு கொண்டுவரமுடியும். அதனால்தான் கொஞ்சம் எடையைக்குறைத்து ‘டர்ட்டி பிக்சர்’ படத்தில் மறைந்த நடிகை சிலுக்கு ஸ்மிதாவாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார் வித்யா.
அவருடைய பெருத்த உடல்வாகுதான், இந்தியாவின் மனிதக் கணினி எனப்படும் கணிதமேதை சகுந்தலாதேவியாக நடிக்கும் வாய்ப்பை வித்யாவுக்கு பெற்றுத் தந்துள்ளது. ‘சகுந்தலாதேவி’ என்கிற அந்தப்படம் சில தினங்களில் இணையத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் உருவகேலி விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. வித்யாவுக்கு ஏற்பட்ட அதே பிரச்சினை நித்யா மேனனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
‘காஞ்சனா-2’, ‘மெர்சல்’ படங்களின் நாயகியான நித்யா மேனன், யதார்த்தமான நடிப்புத் திறமைகொண்ட நடிகைகளில் முக்கியமானவர். அவரின் தோற்றம் அண்மைய ஆண்டுகளில் சற்றே குண்டானது.
இதனால் நித்யா தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகி வருகிறார். விரைவில் அவர் நடித்த இணையத் தொடர் ஒன்று வெளியாக உள்ள நிலையில், அதன் விளம்பரத்துக்காக காணொளிப் பதிவு ஒன்றில் நித்யா தோன்றி உரையாடியதைப் பார்த்து அவரை உருவகேலி செய்திருக்கிறார்கள்.
இதனால் வருத்தமடைந்த நித்யா மேனன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
”எனது திறமையை மட்டும் பாருங்கள், அதில் குறை இருந்தால் விமர்சனம் செய்யுங்கள், ஆனால், உடல் தோற்றம், சொந்த வாழ்க்கை குறித்தெல்லாம் பேச யாருக்கும் உரிமை இல்லை. இதை நான் எனக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும் சொல்கிறேன்,” என தன்னை உருவகேலி செய்தவர்களின் புத்தியில் உரைப்பது போல் கூறியுள்ளார் நித்யா.
ஒல்லியாக இருந்தால்தான் ரசிகர்களின் கனவுக்கன்னியாக முடியும் என்பது ஒருவித மாயைதான்.
தனுஷுடன் ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்த வாமிகா சில தினங்களுக்கு முன் தன் வலைப்பக்கத்தில் தன் அங்க வடிவழகு புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு ஒரு குறிப்பும் கொடுத்துள்ளார்.
வாமிகாவை ஒல்லியானவர் என்று சொல்லமுடியாது. அழகான சதைப்பிடிப்பு கொண்டவர். அவர் தன் குறிப்பில். “வசீகரம் என்பது உடல் வளைவு நெளிவுகளில் இல்லை.
“அது ஆன்மாவிலிருந்து வெளிப்படுவது,” எனச் சொல்லியுள்ளார். இரு கண்ணால் உடலழகைப் பார்க்கும் அதே நேரத்தில் மனதால் எங்கள் திறமையையும் பாருங்கள் என்பதே நடிகைகளின் கோரிக்கையாக உள்ளது.