‘பெண்குயின்’ படம் இணையத்தில் வெளியிடப்பட்டது சரியான முடிவுதான் என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இணையத்தில் வெளியானதால் மேலும் பரவலான ரசிகர்களிடம் இந்தப் படம் தன்னைக் கொண்டு சேர்த்திருப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் விஜய்க்கு இவர் இசை வாழ்த்து தெரிவித்ததைப் பலரும் பாராட்டி உள்ளனர்.
கீர்த்திக்கு வயலின் வாசிக்கத் தெரியும் என்பதே அந்த வாழ்த்தின் மூலம்தான் பலருக்கும் தெரிய வந்துள்ளதாம்.
‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்ற ‘குட்டி ஸ்டோரி’ பாடலை வயலினில் வாசித்து விஜய்க்கு அண்மையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் கீர்த்தி.
“பள்ளியில் படிக்கும்போது வயலின் வாசிக்க கற்றுக்கொண்டேன். அப்போதெல்லாம் தொடர்ந்து வயலின் வகுப்புக்குச் செல்வதுண்டு.
“அடிப்படை விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகு வயலின் வகுப்புகளைத் தொடர முடியவில்லை.
“நேரம் கிடைக்கும்போது எடுத்து வாசித்தேன். ஒரு கட்டத்தில் படங்களில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கியதும் வயலினை தொட முடியவில்லை.
“இந்த ஊரடங்கு நேரத்தில்தான் பல விஷயங் களைச் செய்வதற்கான நேரம் கிடைத்துள்ளது. அதில் வயலின் வாசிப்பதும் முக்கியமான ஒன்று,” என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அண்மைய சில தினங்களாக சமையலறையில்தான் இவர் அதிக நேரத்தைச் செலவிடுகிறாராம். அதன்பிறகு தனது செல்ல மகனை (செல்ல நாய்க்குட்டியைத்தான் இப்படி குறிப்பிடுகிறார்) கொஞ்சுவதற்கு அதிக நேரம் ஒதுக்குகிறாராம்.
“என் மகனும் அன்பை அள்ளிக் கொட்டுகிறான். சமைப்பது, மகனுடன் விளையாடுவது என்று நேரம் போகிறது. ‘நடிகையர் திலகம்’ படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். இதற்கே ஆறரை மாதங்கள் போய்விட்டன.
“எனினும் ஊரடங்கால் உடற்பயிற்சி செய்வதற்கு நிறைய நேரம் கிடைத்தது. அதன் பலனாக நன்கு இளைத்துள்ளேன். உடனே புதுப்படத்துக்காக எனது தோற்றத்தை மாற்றிக்கொண்டதாக சிலர் நினைத்து விட்டனர்.
“பெண்களை மையப்படுத்தும் கதையில் நடிக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்த நிலையில்தான் ‘பெண்குயின்’ பட வாய்ப்பு கிடைத்தது. அதனால் ஒப்புக்கொண்டேன்,” என்று சொல்பவர், அடுத்து மலையாளத்தில் நடித்துள்ள ‘மரக்கார் - அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறாராம்.
இவரைக் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய பிரியதர்ஷன் இயக்கியுள்ள படம் இது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் மலையாளத் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கும் படைப்பாக இருக்கும் என்கிறார் கீர்த்தி சுரேஷ்.
“இந்த ஊரடங்கு இல்லையென்றால் என் நடிப்பில் சில படங்கள் இந்நேரம் வெளியாகி இருந்திருக்கும். ஆனால், சில விஷயங்களை நம்மால் தீர்மானிக்க முடியாது.
“இந்தக் கட்டாய ஓய்வும் விடுமுறையும் இயற்கை நமக்கு வைக்கும் தேர்வு போன்றே இருக்கிறது. எதிர்பாராத சூழலை எப்படி சமாளிக்க வேண்டும்? எப்படி எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும் என்பதை நாம் கற்று வருகிறோம்.
“இந்த ஊரடங்கால் சில நன்மைகளும் விளைந்திருப்பதை மறுக்க முடியாது. அனைவரும் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வருங்காலத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும்,” என்று சொல்லும் கீர்த்தி, தமிழில் தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிரபல தொழிலதிபரின் மகனுக்கும் இவருக்கும் திருமணம் என்று வெளியான தகவல் முற்றிலும் பொய் என்று ஏற்கெனவே மறுத்திருப்பவர், அண்மைக்காலமாக இது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளைக் கண்டு கொள்வதாக இல்லை.
கற்பனையாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து எந்தவிதமான பலனும் இல்லை என்கிறார்.
“என்னைப் பொறுத்தவரை தற்போது நான் உண்டு, எனது திரைப்படப் பணிகள் உண்டு என்று வேலையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறேன். என் பெற்றோர் பக்கபலமாக இருப்பதால் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வாழ்க்கை அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறது,” என்கிறார் கீர்த்தி.
ஊரடங்கைப் பயன்படுத்தி நண்பர்கள், உறவினர்கள் என்று பலரையும் தொடர்புகொண்டு பேசி வருவதாகச் சொல்பவர், இயல்பு நிலை திரும்பியதும் அவர்களில் பலரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளாராம்.
அந்நாளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகச் சொல்கிறார்.