நம்மால் எதையும் சாதிக்க முடியாது என்று நினைத்தால் அதுவே நமது பலவீனமாகிவிடும் என்கிறார் காஜல் அகர்வால்.
சவால்கள் என்றால் தமக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கையிலும் சினிமாவிலும் தாம் இதுவரை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அந்தச் சவால்களைத் தைரியமாக சந்தித்ததாகச் சொல்கிறார்.
“கடினமான வேலை என்றால் பயப்பட மாட்டேன். அதேபோல் திடீர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது ஓடி ஒளியும் பழக்கமும் எனக்கில்லை.
“இதுவரை நான் நடித்த பல படங்களில் என் திறமைக்குச் சவால் விடும் வகையிலான கதாபாத்திரங்கள் அமைந்தன. அவற்றைக் கண்டு நான் மிரளவில்லை. காரணம் அப்படிப்பட்ட வாய்ப்புகளைப் பெறவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது,” என்கிறார் காஜல்.
தொழில் ரீதியிலான சில பிரச்சினைகளைத் தாமும் கடந்த காலங்களில் சந்தித்திருப்பதாகக் குறிப்பிடுபவர், அந்த சவால்களில் வெற்றி பெற்ற பிறகு அனைத்தும் இனிமையான நினைவுகளாக மாறிவிட்டன என்கிறார்.
அஜித்துடன் நடித்த ‘விவேகம்’ படத்துக்கான படப்பிடிப்பு வெளிநாட்டில் மைனஸ் 12 டிகிரி குளிரில் நடைபெற்றதாம். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் சேலை அணிந்து நடித்தாராம் காஜல்.
எனினும் தன்னைத் திரையில் கண்ட ரசிகர்கள் கைதட்டி பாராட்டியதைக் கண்டபோது தாம் பட்ட சிரமங்கள் மறந்து போனதாகச் சொல்கிறார். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்தால் போதும், அதுவே நம் பலமாகிவிடும்.
“அதேபோல் பிரச்சினைகளைக் கண்டு பயப்படுவதோ, ஓடி ஒளிவதோ நல்ல தீர்வல்ல. பெண்கள் இதை மனதிற்கொள்ள வேண் டும்,” என்கிறார் காஜல்.
தமிழில் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் காஜல், ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார்.