பள்ளி, கல்லூரியில் படித்தபோது யாரிடமும் தாம் அதிகம் பேசியதில்லை என்றும் தமக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்றும் சொல்கிறார் விஜய் சேதுபதி.
‘96’ திரைப்படம் பெரியளவில் வெற்றி பெறும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நட்சத்திரம் அல்லது பெரிய கதாநாயகன் எனும் பிம்பத்துக்குள் தாம் சிக்க விரும்பவில்லை என்றும் அது பெரிய சிறைச்சாலையைப் போன்றது என்றும் சேதுபதி தெரிவித்துள்ளார்.
“23 வயது வரையில் நானும் ‘96’ படத்தில் வரும் ராம் கதாபாத்திரம் போன்றுதான் இருந்தேன். மாணவர், மாணவியர் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரியில்தான் படித்தேன். கூச்ச சுபாவம் உள்ள எனக்குள் அந்த ராம் கதாபாத்திரம் இருந்தது. ‘96’ இயக்குநர் அதைத் தொட்டதால்தான் அந்தப் படத்தில் நடிக்க முடிந்தது.
“ஆனால் படம் இந்த அளவுக்கு வெற்றிபெறும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. சுமாராகப் போகும் என்றுதான் நினைத்தேன். மேலோட்டமாகப் பார்த்தால் அந்தப் படம் பிடிக்காது. அந்தக் கதைக்குள் சென்று உணர வேண்டும்.
“இயக்குநர் பிரேம் குமார் கதையை விவரித்த உடனே, ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதை வந்திருந்தால் சொதப்பி இருப்பேன். இப்போதுதான் சரியாகப் பண்ண முடியும் என நினைக்கிறேன்’ என்றுதான் சொன்னேன். ஒருவேளை இப்போது படம் பார்த்தால் கொஞ்சம் சொதப்பி இருப்பதாக தோன்றக்கூடும்,” என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
கதாநாயகனாக வளரும் வரை சென்னையில் தாம் வசித்த தெருவில் யாருக்குமே தெரியாத ஒருவராகத்தான் சுற்றிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாகவே கதாநாயகன் எனும் பிம்பத்துக்குள் சிக்க விரும்பவில்லை என்றும் அவ்வாறு சிக்கினால் வெளியே வரவே முடியாது என்றும் கூறியுள்ளார்.
கோடம்பாக்கத்தில் முன்னணி நடிகராக உருவெடுத்து வந்த வேளையில் திடீரென ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் முதியவர் வேடத்தில் நடித்தது குறித்தும் இப்பேட்டியில் விவரித்துள்ளார் சேதுபதி.
அதில் நடிக்க வேண்டிய ஒருவர் கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டாராம். தனது நண்பர் முதலீடு செய்துள்ள படம் என்பதால் அவருக்கு உதவ முன்வந்தாராம் சேதுபதி.
“அந்தப் படத்துக்கு நான்தான் வசனம் எழுதினேன். மேலும், இயக்குநருடன் இணைந்து திரைக்கதை வேறு அமைத்திருந்தேன். அந்தக் கதை பற்றி முழுமையாகத் தெரியும் என்பதால், இறுதியில் இயக்குநரிடம் சில யோசனைகளைத் தெரிவித்தேன். எனக்கு ஒப்பனை போட்டுப் பார்க்கலாம். சரியாக இருந்தால் படத்தை தொடரலாம் என்று திட்டமிட்டோம். ஒப்பனைக்குப் பிறகு எனது தோற்றம் அனைவருக்குமே பிடித்திருந்தது. அதனால் நடித்தேன்,” என்கிறார் விஜய் சேதுபதி.
நடிகர்கள் ரஜினி, சிரஞ்சீவி இருவருமே ரசிகர்களை சுமார் 40 ஆண்டுகளாக கட்டிப்போட்டு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இருவரும் எப்படி வேலை செய்கிறார்கள், நடிக்கிறார்கள் என்பதை எல்லாம் நேரில் பார்த்து கற்க வேண்டும் என்பதற்காகவே இணைந்து நடித்தாராம்.
“ரஜினி சார் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். நாம் என்ன செய்யப் போகிறோம், அது திரையில் என்னவாக வரப்போகிறது, ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது வரை தெரிந்து வைத்திருப்பார்.
“அவரிடம் சுமாரான காட்சியைக் கொடுத்தால்கூட பிரமாதப்படுத்தி விடுவார்.
“அது மிகவும் ஆச்சரியமான விஷயம்,” என்று தெரிவித்துள்ள சேதுபதி, திரையில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் ரஜினிதான் எங்கள் அனைவருக்குமே ‘மாஸ்டர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்பேட்டி வரவேற்பு கிடைத்துள்ளது.