ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி நடித்த ‘தி பாடி’ படத்தின் மூலம் இந்தியிலும் கால் பதித்துள்ளார் வேதிகா.
இந்நிலையில் தன்னைப் பற்றி வெளிவரும் கிசுகிசுக்களால் வருத்தம் அடைந்துள்ளதாக அண்மைய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
ஒருசிலர் ஏன் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை எழுதுகின்றனர் என்று தமக்குத் தெரியவில்லை என்றும் கிசுகிசுக்களால் பெரிய பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இப்படி எழுதுபவர்களைப் பற்றி வேறு யாராவது கிசுகிசு எழுதினால் இவர்கள் தாங்கிக் கொள்வார்களா? திரையுலகக் கலைஞர்களுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. நாங்கள் ஏதாவது மன அழுத்தத்தில் இருக்கலாம், உறவுப் பிரச்சினையில் இருக்கலாம், தொழிலில் மோசமான கட்டத்தில் இருக்கலாம்.
“ஆனால், அவையெல்லாம் பொழுதுபோக்குக்காக, கவன ஈர்ப்புக்காக செய்தியாக மாறினால், ஒருவரின் சோகத்தையும் வலியையும் வைத்து வருவாய் சம்பாதித்தால், அது மிகவும் முறையற்ற செயல்,” என்று வேதிகா மேலும் தெரிவித்துள்ளார்.