ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் கிடைத்த நுழைவு, விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக உயர்த்தியதுடன், இன்று இந்திப் படம் ஒன்றில் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெறும் நாயகியாக மாளவிகா மோகனனை உயர்த்தி இருக்கிறது.
ரஜினி சொல்லிக்கொடுத்த ஆன்மிக விஷயங்களும் கிரியா யோகாவின் மகிமைகளும் தன்னை ரொம்பவே பக்குவப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார் மாளவிகா.
தன் அப்பா மோகனன் போல் (மோகனன் சினிமா ஒளிப்பதிவாளர்) கேமரா மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட மாளவிகா, ரஜினி விவரித்த இமயமலையின் நிசப்தத்தை அனுபவிப்பதற்காக கடந்த ஆண்டு அங்கே சென்றிருந்தார். மலைகளின் அசாத்திய மௌனத்தை தன் கேமராவில் அள்ளிக்கொண்டு வந்தார் மாளவிகா.
பிறகு திடீரென காட்டு வாழ்க்கை மீது பிரியம் ஏற்பட, தான்சானியா நாட்டிற்குச் சென்று அங்குள்ள காட்டு விலங்குகளுடன் சுற்றிவிட்டு, அவைகளின் வாழ்க்கையை கேமராவில் பதிவு செய்து அசத்தினார்.
அடுத்து மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஆர்வம் கொண்டு அதிலும் தேறியிருக்கிறார். அவர் ‘புல்லட்’ ஓட்டுகிற பாணிதான் இந்தியில் உருவாகும் அடிதடிப் படம் ஒன்றில் அதிரடி நாயகியாக பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறது.
இப்படி புதுப்புது விஷயங்களில் மாளவிகா ஆர்வம் காட்ட உந்து சக்தியாக இருப்பது ரஜினி சொல்லித்தந்த கிரியா யோகா சூட்சுமமும் மாளவிகாவின் சுய ஆர்வமும்தானாம்.
இப்படி மாளவிகா புதுவிதமாக மாறியிருந்தாலும்கூட, தன் நிறம் குறித்து கேலி செய்தால் மிகுந்த ‘கோபக்காரி’ ஆகிவிடுகிறார் என்பதை அவரது வலைத்தளப் பதிவுகள் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்கள் ரசிகர்கள்.
இந்தக் கோபம் காரணமாக அவருக்குப் பெண்ணியவாதி என்கிற முத்திரையும் விழுந்திருக்கிறது.
‘நீங்கள் பெண்ணியவாதியா?’ என்கிற பொதுவெளியில் அமைந்த கேள்விக்கு, “ஆண்களை வெறுப்பவர்கள், அவர்கள் மீது கண்மூடித்தனமாக குற்றம் சுமத்துபவர்கள், ‘இந்த ஆண்களே இப்படித்தான்’ என பொதுவான குற்றம் சுமத்துபவர்கள், இதையெல்லாம் செய்பவர்கள் மட்டும்தான் பெண்ணியவாதி என்றால், நிச்சயம் நான் பெண்ணியவாதியல்ல.
“ஏனென்றால் நான் என் வாழ்க்கையில் என் தந்தை உட்பட பல அற்புதமான ஆண்களை சந்தித்திருக்கிறேன். ஆணும் பெண்ணும் ஏழையும் பணக்காரனும் எல்லா இனத்தவரும் சமத்துவமாக மதிக்கப்படவேண்டும். அதை மட்டுமே நான் விரும்புகிறேன்.
“நான் என் பெற்றோரால் சமத்துவம் சொல்லி வளர்க்கப்பட்டவள். ஆணும் பெண்ணும் கறுப்பு நிறத்தவர்களும் சிகப்பான நிறத்தவர்களும் சமமாக நடத்தப்படாததைக் கண்டிப்பதை, பெண்களுக்கு மரியாதை வேண்டும் என்று கேட்பதை பெண்ணியவாதம் என நீங்கள் நினைத்தால் நான் பெண்ணியவாதிதான்,” என்கிறார் மாளவிகா.
அது மட்டு மல்ல, நிறம் நம்மை அழ காக்காது என்றும் ஒருவருக்கு கருணை உள்ளம் தான் அழகு சேர்க்கும் என்றும் கூறி, தன் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறார் மாளவிகா.