விஜய் சேதுபதி கோடம்பாக்கத்தில் பெரிய உயரத்தில் இருக்கிறார் என நாசூக்காகத் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் தனக்கே உரிய நகைச்சுவை, நையாண்டியுடன் அவர் பதிவிட்டுள்ளார்.
அதில் பார்த்திபனுக்கு அருகே விஜய் சேதுபதி பணிவாக நின்றிருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் தற்போது டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகின்றனர்.
“நானும் ரவுடிதான், நீயும் ரவுடிதான். இன்று உன் ‘துக்luck தர்பார்’ எவ்வளவு பெரிய லெவலில் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு, ‘இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக்குமா?’ என்பது போல் பவ்யமாக கையைக் கட்டிக்கொண்டு நின்றால் என்ன அர்த்தம்? உன் மாஸ்டர் (MASTER plan) பிளான்தான் என்ன?” எனத் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.
‘துக்ளக் தர்பார்’ படத்தில் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சேதுபதி ஜோடியாக அதிதி ராவ் நடிக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் முதல்தோற்ற சுவரொட்டிக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் ஏழு புகைப்படங்களையும் இப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அவை பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.