அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ படம் சில பிரச்சினைகளால் முடங்கியிருப்பது தெரியும். இந்நிலையில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கி வரும் படம் என மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இவற்றுக்கும் முன்பாகவே அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படம்தான் ‘பாக்ஸர்’.
நல்ல கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே நடிக்க சம்மதித்தாராம்.
மேற்குறிப்பிட்ட படங்களுக்கு முன்பாகவே ‘பாக்ஸர்’ படத்துக்கு பூசை நடத்தி, கையோடு படப்பிடிப்பையும் துவங்கினர்.
தலைப்பைக் கேட்டவுடனேயே இது என்ன மாதிரியான படம், கதை என்பதை ரசிகர்கள் யூகித்துவிட முடியும். படத்துக்கு பூசை போட்ட சில தினங்களில் வெளிநாட்டுக்குப் பறந்து சென்றார் அருண்.
அங்கு தற்காப்புக் கலைகளில் உள்ள புதிய நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
இந்நிலையில் ‘பாக்ஸர்’ படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டிகள் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
நல்லதொரு நாளில் படப்பிடிப்பு தொடங்கியதாம். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு எந்தத் தகவலும் இல்லை.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்து ஏதும் தகவல் இல்லாததால் பிறப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் அருண் விஜய். ஆனால் நீண்ட கால தாமதம் ஏற்படவே, அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், இப்படத்துக்காகத் தம்மைத் தயார்ப்படுத்தக் கடினமாக உழைத்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் ‘பாக்ஸர்’ படத்தில் சிக்கல் உருவாகி உள்ளது தெளிவாகிறது. படப்பிடிப்பு தாமதமானதால் படக்குழுவினர் மீது அவர் கடுங்கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இப்படம் தொடர்பான இன்னொரு தகவலும் கசிந்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர், அருண் விஜய்யை ஒப்பந்தம் செய்தபோது இந்தி நடிகர் அனுராக் காஷ்யப்பை வில்லனாக நடிக்க வைக்கத் திட்டம் என்று கூறி இருந்தாராம்.
அருணுக்கும் இந்த ஏற்பாடு பிடித்துப் போகவே உற்சாகத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் பத்து நாட்கள் கழித்துப் படப்பிடிப்பு நின்று போனது, தயாரிப்புத் தரப்பில் போதுமான பணமில்லை, எதிர்பார்த்த தொகை கிடைக்கவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்ட காரணங்களால் அருணும் குழம்பியிருப்பதாகத் தகவல்.
மேலும், அனுராக் காஷ்யப் இப்படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளர் தாமே வில்லனாக நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அருண் காதுகளுக்கு ஒரு தகவல் போனதாம்.
இதுவும் அவருக்கு எரிச்சல் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகே அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆக மொத்தத்தில் ‘பாக்ஸர்’ படம் முடியும் முன்பே மோதல் தொடங்கிவிட்டது. எனினும் அருண் விஜய்யை சமாதானப்படுத்தும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்.