இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' படம் திருவிழாபோல திரையரங்குகளில் மக்களால் கொண்டாடப்பட்டது.
அந்தப் படத்தின் வெற்றிக்கு பாக்யராஜின் திரைக்கதை உத்தியும் கதைக்களமும் காரணம் என்றாலும், அதன் அமோக வெற்றிக்கு காராணமாக இருந்தது படத்தில் இடம்பெற்ற முருங்கைக்காய் சமாச்சாரம்.
அதாவது, முருங்கைக்காய் உணவு சாப்பிட்டால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும் என்கிற சேதி அந்தப் படத்தில் சொல்லப்பட்டது. இதை விரும்பாததுபோல் 'ச்சீய்' எனச் சொல்லிக்கொண்டே ரசித்தவர்கள் அதிகம் பேர் என பாக்யராஜ் அடிக்கடி கூறுவார்.
இன்றளவும் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் பொரியல் போன்றவை இளம் தம்பதிகளால் நமட்டுச் சிரிப்போடுதான் உண்ணப்படுகிறது.
அல்வாவும், மல்லிகைப் பூவும் பாலியல் விருப்பத்தைத் தெரிவிக்கும் குறியீடாக பார்க்கப்பட்ட நிலையில், பாக்யராஜால் முருங்கைக்காயும் பாலியல் குறியீட்டுப் பொருளாக பார்க்கப்பட்டது.
உண்மையாகவே முருங்கைக்காய் உணவில் பாலியல் ஆசையைத் தூண்டும் சத்து இருக்கிறதா என்றால், அதுகுறித்து அறிவியல் பூர்வமாக ஏதும் நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை.
எனினும், நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்ததாக, முருங்கைப்பூ, முருங்கைப்பிஞ்சு, முருங்கைஇலை, முருங்கைக்காய், முருங்கைப்பிசின் என முருங்கை மரத்தின் எல்லா அம்சங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் உணவாகவும் மருந்தாகவும் முருங்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எதுக்கு இப்போ இவ்வளவு பெரிய முருங்கை புராணம்?
பல ஆண்டுகளுக்கு முன்பே திரையில் முருங்கைக்காயை பாலியல் குறியீடாகச் சொல்லி, முருங்கைக்கு மேலும் மவுசு சேர்த்த பாக்யராஜ், இந்த தலைமுறைக்கும் முருங்கைக்காய் முக்கியமானது எனச் சொல்ல வருகிறார்.
ஆமாம், அவரது மகன் சாந்தனு, அதுல்யா ரவி ஜோடியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க 'முருங்கைக்காய் சிப்ஸ்' எனும் புதிய படம் தயாராகிறது.
'முந்தானை முடிச்சு' படத்தில் மேலோட்டமாகச் சொல்லப்பட்ட முருங்கைக்காயின் சிறப்பு குறித்த தாக்கம் இன்றளவும் இருக்கிறது. சாந்தனு நடிக்கும் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் பெரும்பகுதியே முருங்கை புராணம்தானாம்.
'முந்தானை முடிச்சு' வெளியீடு கண்ட ஓரிரு தினங்களிலேயே முருங்கை குறித்து படத்தில் கூறப்பட்ட விஷயங்கள் சும்மா 'கிளுகிளுப்பு'க்காக சேர்க்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார் பாக்யராஜ்.
இதற்கிடையே முந்தானை முடிச்சு வெளியாகி 36 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன் மறுபதிப்பை தயாரிக்க முடிவு செய்துள்ளார் இயக்குநரும் நடிகருமான சசிகுமார். இதில் பாக்யராஜ் நடிக்கவில்லை என்றும், இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

