ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதே தமது விருப்பம் என்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
வெளிநாட்டில் நாயகனுடன் காதல் பாடலுக்காக நடனமாடுவது, அழகுப் பொம்மையாக படம் முழுவதும் வந்து போவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய சில படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி. இதனால் சமூக வலைத்தளங்களில் சிலர் மிகவும் திமிர் பிடித்தவர், வில்லி என்று பலவிதமாக விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இத்தகைய விமர்சனங்கள் தம்மை பாதிப்பதில்லை என்று பதிலளித்துள்ளார். நாயகனுடன் மரத்தைச் சுற்றி வந்து ஆடிப்பாடுவது போன்று நடிக்க பல பேர் இருக்கிறார்கள். நானும் அதேபோல் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு என்னால் உடன்பட முடியாது. வாய்ப்பு கிடைக்காதே என்று நான் கவலைப்படுவதில்லை," என்கிறார் வரலட்சுமி.
தம்மைப் பொறுத்தவரை கதைதான் ஒரு படத்தின் கதாநாயகன் என்று குறிப்பிட்டுள்ள அவர், கதாநாயகி என்று அழைப்பதை விட, கதையின் நாயகி என்று அழைக்கப்படுவதையே தாம் விரும்புவதாகக் கூறியுள்ளார்.
"எனக்கு ஒரு படத்தில் யார் யார் நடிக்கின்றனர், எனது கதாபாத்திரம் படம் முழுவதும் வருமா? எனக்கு முக்கியத்துவம் இருக்குமா? என்றெல்லாம் கவலைப்பட மாட்டேன். கதை நன்றாக இருந்தால் போதும், என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தால் கூட தயக்கமின்றி நடிப்பேன். நான் நாயகியா, வில்லியா என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை," என்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
இவரது தலைமையில் இயங்கி வரும் சமூகசேவை அமைப்பு பலருக்கு உதவி வருகிறது. இதேபோல் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை பிற மக்களுக்குச் செய்ய வேண்டும் என வரலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"எனது இலக்குகளை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளேன். எனது இத்தகைய முயற்சிகளுக்கு அப்பாவின் ஆதரவு உள்ளது.
"மேலும், ரசிகர்கள் பலரும் தாமாக முன்வந்து என்னுடன் இணைந்து செயல்படுகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி," என்கிறார் வரலட்சுமி.

