தாம் திரையுலகை விட்டு விலகப் போவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஏமி ஜாக்சன்.
80 வயது வரை தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் தமது விருப்பம் என்று அண்மைய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் ஏமி ஜாக்சன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018ல் வெளியான படம் '2.0'. அதன் பிறகு இங்கிலாந்தில் தங்கியிருந்தார்.
இந்தியாவில் இல்லாதது ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஏமி, தாம் இன்றுள்ள நிலைக்கும் நடிகையாக உருவானதற்கும் இந்தியா தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
"ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எனது முதல் படமான 'மதராசபட்டின'த்தில் நடித்த போது நான் பதின்ம வயதில் இருந்தேன். சினிமா குறித்து அதிக விவரங்கள் தெரியாது.
"எனினும் சில அனுபவங்களின் துணையோடு நான் தனித்து நிற்க கற்றுக் கொண்டேன். எதையும் அர்ப்பணிப்புடன் செய்யும் மனப்போக்கும் குணமும் என்னுள் வந்திருக்கிறது. இன்னமும் கூட பல விஷயங்களையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இருக்கிறது," என்கிறார் ஏமி ஜாக்சன்.
எல்லோருக்குமே வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தானும் அதற்கு விதிவிலக்கல்ல என்கிறார்.
"அதே வேளையில் வாய்ப்புகள் அமைந்தாலும் அர்ப்பணிப்பும் திறமையும் இல்லாதவர்களால் கலைத்துறையில் தாக்குப்பிடிக்க முடியாது.
"இதை புரிந்துகொண்டதால் என் வளர்ச்சி சீராக இருந்தது. நான் திரையுலகில் நடிக்க வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. தொடக்கம் முதலே தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிப் படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது," என்கிறார் ஏமி.
கடந்த காலத்துக்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் சில விஷயங்களை மாற்றி அமைக்க விரும்புவீர்களா? என்று கேட்டால், அதற்கு அவசியமே இல்லை என்பதே இவரது பதிலாக உள்ளது.
"சினிமாத் துறையில் நடிகையாவது என்பது சாதிக்க முடியாத விஷயம் என்று நினைத்த சமயத்தில் எனக்கு அது சாத்தியமானது. இயக்குநர் ஏ.எல்.விஜய் என்னை அணுகி, கதை சொல்லி நடிக்க வைத்தார்.
"நான் நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கிறேன் என்று தோன்றியதால் நடிக்க சம்மதித்தேன்," என்று சொல்லும் ஏமி ஜாக்சன், இதுவரை தாம் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே தமக்குப் பிடித்தமானது என்கிறார்.
அனைத்துப் படங்களிலும் அர்ப்பணிப்புடன் நடித்ததாகக் குறிப்பிடுபவர், கடந்த ஐந்து ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
"எப்போதுமே நான் நடிக்கும் படத்தின் கதையையும் கதாபாத்திரத்தையும் மெருகேற்ற விரும்புகிறேன். மேலும் இவ்விரு அம்சங்களில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
"எனது திறமை மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது. எனவே எனது திரைப்பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் இதுவரை இல்லை. எனது பயணம் தொடர வேண்டும் என விரும்புகிறேன்.
"இப்போது தெரிந்துகொண்ட சில விஷயங்களை முன்பே அறிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவ்வப்போது தோன்றும். ஒருவரது வயது அதிகரிக்கும் போது முதிர்ச்சியும் அதிகமாகும்," என்கிறார் ஏமி ஜாக்சன்.
தற்போது தனது மகன் ஆன்ட்ரியாசுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது என்றும் தாம் மிக விரைவில் வெள்ளித்திரையில் தோன்ற அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
"ஒரு நடிகையாக என் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. 80 வயதானாலும் கூட தொடர்ந்து நடிக்க வேண்டும் எனும் ஆசையும் இருக்கிறது.
"எனவே குடும்பக் கடமைகளை நிறைவேற்றிய பிறகு மீண்டும் நடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன்.
"ரசிகர்களிடம் ஒரு நடிகையாக பெயர் எடுத்த நான் நல்ல தாயாகவும் இருக்க விரும்புகிறேன்," என்கிறார் ஏமி ஜாக்சன்.
அண்மையில் தன்னைத் தேடி வந்த சில வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகச் சொல்பவர், தாம் அவசரப் படவில்லை என்கிறார்.

