வீடு திரும்பினார் விஜய் மகன்
ஒருவழியாக விஜய் குடும்பத்தார் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். வேறொன்றுமில்லை... கனடாவில் இருந்து அவரது மகன் ஜேசன் சஞ்சய் வீடு திரும்பியுள்ளார்.
கனடாவில் படித்துக் கொண்டிருந்த சஞ்சய், கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கேயே முடங்க நேரிட்டது. இந்நிலையில் அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் விஜய் குடும்பத்தார் கவலை அடைந்தனர்.
இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு சென்னை வந்தார் சஞ்சய். பின்னர் அவர் அரசு உத்தரவின்படி நட்சத்திர தங்கு விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார். இரு வாரம் முடிந்ததையடுத்து அவர் வீடு திரும்பியுள்ளாராம். மகனை கண்டதும் உற்சாகம் அடைந்த விஜய், தற்போது அவருடன் அதிக நேரத்தை செலவிட்டு வருவதாகத் தகவல். சஞ்சய் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தகுந்த பதிலடி கொடுத்த ரித்விகா
அனைவரும் சாதிகளற்ற சமூகமாக, மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டும் என பிக்பாஸ் புகழ் ரித்விகா தெரிவித்துள்ளார்.
மேலும் தலித் பெண்ணாகப் பிறந்திருந்தால் தமக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி கிடைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார் ரித்விகா. அதற்கு ரசிகர் ஒருவர் அவதூறாக பதில் அளித்தார். இதையடுத்து ரித்விகாவும் பதிலடி கொடுத்துள்ளார்.
விமர்சனங்கள் தமக்குப் புதிதல்ல என்றும் தலித்தாக பிறந்திருந்தால் அதிக மகிழ்ச்சி கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள்தான். அதற்காக வருந்துகிறேன்.
“ஒருவகையில் நானும் தலித்தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனில் பெண்ணாகிய நானும் தலித் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகைப் பாராட்டியதற்கு நன்றி,” என்று ரித்விகா தமது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
தாத்தாவாகப் போகிறார் விக்ரம்
இன்னமும் அதிரடி சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் அசத்திக் கொண்டிருக்கும் விக்ரம் நிஜ வாழ்க்கையில் மிக விரைவில் தாத்தா ஆகப்போகிறார் என்பதை சிலரால் நம்ப முடியாது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது அக்ஷிதா தாய்மை அடைந்துள்ளாராம்.
அண்மையில் எளிய முறையில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். இன்னும் சில மாதங்களில் விக்ரம் தாத்தாவான செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.