தனது சினிமா வாழ்க்கை இதுவரை திருப்திகரமாக இருக்கிறது என்கிறார் நடிகை சாய் பல்லவி.
பெரிய நடிகையாக வேண்டும், பிறரால் சாதிக்கமுடியாத பலவற்றைச் சாதிக்க வேண்டும் என்பன போன்ற லட்சியங்கள் ஏதும் தமக்கு இல்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
தனுஷ் ஜோடியாக 'மாரி-2' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாய்பல்லவி தனது நடிப்பாலும் நடனத்தாலும் ரசிகர்கள் மனதைக் கவர்ந்து வருகிறார்.
தனுசுடன் இவர் இணைந்து ஆடிய 'ரௌடி பேபி' பாடல் நடனத்துக்கு உலகளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சூர்யாவுடன் 'என்ஜிகே' படத்தில் நடித்தார்.
இந்நிலையில் தம்மால் எந்த ஒரு கட்டத்திலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.
தனது பலம் என்ன, பலவீனம் என்ன என்பது குறித்து நன்கு அறிந்து வைத்திருக்கிறாராம். எனவேதான் தமக்குப் பொருத்தமில்லாத கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்கிறார்.
"எல்லோருடைய மனதிலும் நிலைத்து நிற்பது போன்ற நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்குரிய பாராட்டு கிடைத்தால் அதுவே எனக்குப் போதுமானது.
"வீட்டிலும் வெளியிலும் யாருமே என்னை ஒரு கதாநாயகி எனும் கோணத்தில் பார்க்கவில்லை. எல்லோருமே என்னை தங்கள் வீட்டுப் பெண்ணாகத்தான் கருதுகிறார்கள். இதுதான் சினிமா எனக்குக் கொடுத்திருக்கும் மிகப்பெரிய பரிசு," என்று சொல்லும் சாய்பல்லவி, தம்மால் அரைகுறை ஆடை அணிந்து நடிக்கமுடியாது என்கிறார்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குழந்தைகளுடன் தாம் நடித்த படங்களைப் பார்க்கும்போது மனதில் எந்தவித குறுகுறுப்பும் இருக்கக்கூடாது என விரும்புகிறாராம்.
"நான் ஏற்கும் கதாபாத்திரங்கள் எனக்கு மட்டுமல்லாமல், படம் பார்க்கிறவர்களுக்கும் சௌகரியமாக இருக்கவேண்டும். எனது கதாபாத்திரத்தில் அவர்களுடைய மகள் இருந்திருந்தால் ஏற்றுக்கொள்வார்களா என்று ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துப் பார்ப்பேன். அதன் பிறகே அதில் நடிக்கலாமா என முடிவெடுப்பேன்.
"என் குழந்தைகளுடன் நான் நடித்த படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கும் புரிய வேண்டும், என் நடிப்பு மகிழ்ச்சியைத் தரவேண்டும். இதுவே எனது விருப்பம். மேலும் என் பெற்றோர், தோழிகள், நான் நடிக்கும் படங்களையும் எனது நடிப்பையும் பார்த்து பெருமைப்பட வேண்டும். அப்படிப்பட்ட கதைகளில் மட்டுமே நடிக்கிறேன்," என்கிறார் சாய் பல்லவி.
இவர் தன் முடிவில் இந்தளவு உறுதியாக இருக்கிறார் எனில் மற்றொரு இளம் நாயகியான அனகா திடீரென கவர்ச்சிப் பாதைக்கு மாறியுள்ளார். ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக 'நட்பே துணை' படத்தில் நடித்த இவருக்குத் தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லையாம்.
கடந்த 2017ஆம் ஆண்டு பிஜுமோகன் நடிப்பில் வெளியான 'ரக்ஷதிகாரி' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் இவர். பிறகு சுந்தர் சி. தயாரித்த 'நட்பே துணை' மூலம் கோடம்பாக்கத்தில் களமிறங்கினார்.
கவர்ச்சி காட்டாமல் அனகா அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இருப்பினும் வாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் உள்ளார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தனது கவர்ச்சிப் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார் அனகா. அவற்றைக் கண்டு ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர்.
இதுகுறித்து அவரது இன்ஸ்டகிராம் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டுள்ள ரசிகர்கள் எப்படியோ அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளனர்.

