பெரிய வெற்றிப் படங்களைக் கொடுக்காவிட்டாலும் தயாரிப்பாளரின் முதலீட்டுக்குப் பாதகம் ஏற்படாத வகையில் சந்தானம் நடிக்கும் படங்கள் வசூல் தருகின்றன.
இந்நிலையில், 'பிஸ்கோத்' படம் ஒரு கதாநாயகனாக சந்தானத்துக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார் அதன் இயக்குநர் கண்ணன்.
"என்னைப் பொறுத்தவரை வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்' எப்படி பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோ, அதே போல் சந்தானத்துக்கு இந்தப் படம் இருக்கும். அந்த நம்பிக்கையால்தான் இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்," என்கிறார் கண்ணன்.
இதில் சந்தானத்துக்கு ஜோடியாக இரு நாயகிகளை களமிறக்கி உள்ளனர். தாரா அலிஷா பெர்ரியும் ஸ்வாதி முப்பலாவும் நடிப்பு, கவர்ச்சி, நடனம் என அனைத்து வகையிலும் அசத்தி உள்ளனராம்.
முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் முன்னோட்ட காட்சித் தொகுப்பு வெளியாகும் நிலையில், இப்படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கண்ணன்.
சுமார் முப்பது நிமிடக் காட்சிகள் 1980களில் நடைபெறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளதாம். இப்பகுதியில் சந்தானம் மன்னர் வேடத்தில் வருவாராம்.
"பிஸ்கட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை முக்கிய கதாபாத்திரம் போன்று சித்திரித்துள்ளோம். அதனால்தான் படத்துக்கு 'பிஸ்கோத்' என்று தலைப்பு வைத்தோம்.
"சந்தானத்தின் வேறு சில பரிமாணங்களை இதில் வெளிப்படுத்தி இருக்கிறோம். 'இம்சை அரசன்' படம் போன்று இதுவும் பேசப்படும் படமாக இருக்கும்.
"சந்தானம் மன்னராக நடிக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும். இதற்காக அந்தக் காலத்து ஆதாரங்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு கலை இயக்குநர் ராஜ்குமார் அரங்கம் அமைத்தார்.
"மேலும், மிகவும் சிரமப்பட்டு உடை அலங்கார நிபுணர் பிரியா ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். இதற்கான காட்சிகளில் துணை நடிகர்கள் 500 பேர் நடித்தனர். அவர்கள் அனைவருக்கும் உடைகள் தயாரிக்கப்பட்டன.
"அந்தக் காட்சிகள் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் நடப்பதாக இருக்கும். பிறகு 1980களில் நடக்கும் சில சம்பவங்கள், அதையடுத்து இப்போதைய 2020ஆம் ஆண்டு சம்பவங்கள் என்று மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்கள் படம் பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்.
"இம்மூன்று காலகட்டத்துக்கும் என்ன தொடர்பு என்பது படம் பார்த்தால்தான் புரியும். மொத்தத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தரமான படைப்பைக் காண ரசிகர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்," என்கிறார் இயக்குநர் கண்ணன்.
படம் எதிர்பார்த்ததைவிட மிக நன்றாக வந்திருப்பதாக சந்தானம் தரப்பும் திருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவல். இந்தப் படம் நிச்சயம் நல்ல வசூல் காணும் என சந்தானம் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம்.

