மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார் வித்யா பாலன். இம்முறை அவரது நடிப்பின் மூலம் கடைக்கோடி ரசிகனையும் சென்றடையப் போகும் கதாபாத்திரம் கணித மேதை சகுந்தலா தேவி.
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படுபவர் இவர். எத்தகைய சிக்கலான கணக்குகளுக்கும் புதிர்களுக்கும் சில நொடிகளில் தீர்வு காணக்கூடியவர்.
சகுந்தலாவின் கதையோடு மேலும் பல வரலாற்றுப்பூர்வமான சம்பவங்களை இப்படத்தில் பதிவு செய்ய இருக்கிறாராம் இயக்குநர் அனு மேனன்.
"முதல் முறையாக பெண் இயக்குநர் ஒருவருடன் பணியாற்றுகிறேன். இந்தப் படத்துக்கான திரைக்கதையை விவரிக்க அனு என்னைத் தேடி வந்தபோது அவர் இந்தளவு நேர்த்தியாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை.
"சகுந்தலா தேவியின் கதையை அவரது மகளின் கோணத்தில் இருந்து சொல்லப் போவதாக அனு கூறியதும் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அது வரை சகுந்தலா தேவியை ஒரு மனிதக் கருவி என்ற அளவில் மட்டுமே தெரிந்து வைத்திருந்தேன்.
"கணிதத்தில் அவர் பல சாதனைகளைப் புரிந்தவர் என்பது தெரியும். ஆனால் இந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்போது அவரை சாதனையாளராக, மேதையாக மட்டுமே பார்க்க முடியும். அனு அந்தச் சாதனையாளரின் இன்னொரு பக்கத்தை காட்சிப்படுத்த முயன்றுள்ளார்.
"சகுந்தலா தேவியைப் பொறுத்தவரை அவர் தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்ததாக கருதுகிறேன். அந்த வகையில் அனைத்துப் பெண்களுக்கும் ஒரு முன்மாதிரி என்பேன்," என்று கணித மேதையின் புகழைப் பாடுகிறார் வித்யா பாலன்.
தாம் ஒருவரது மனைவி, ஒரு தாய் என்பதை மீறி 'நான் சகுந்தலா தேவி' என்பதையும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சகுந்தலா தேவி பதிவு செய்து வந்திருப்பதாகக் குறிப்பிடும் வித்யா, ஒரு தாயாகவும் தனிநபராகவும் மிகச் சிறப்பாக தனது பங்களிப்பை வழங்கி இருப்பதாகப் பாராட்டுகிறார்.
"சாதித்த பெண்களிடம் அவர்களது அனுபவங்களைக் கேட்கும்போது தாயாகவும் சாதனையாளராகவும் வாழ்க்கையைச் சமன்படுத்துவது பெரும் சவாலாக இருந்ததாகச் சொல்வதுதான் வழக்கம். இது போன்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம்.
"ஆனால் சகுந்தலா தேவியைப் பற்றிய சிக்கலான மற்றும் முரண்பட்ட விஷயங்கள் அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளத் தூண்டின.
"அந்தக் காலத்தில் நம் பெண்கள் அறிந்திராத சர்ச்சைக்குரிய சில விஷயங்கள் குறித்து அப்போதே தன் கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்தி உள்ளார் சகுந்தலா தேவி. அவரது அந்த தைரியம் அலாதியானது," என்கிறார் வித்யா பாலன்.
கடைசி வரை சகுந்தலா தேவி தனது தனித்துவத்தை, அடையாளத்தை இழந்துவிடாமல் கட்டிக்காத்ததாக குறிப்பிடுபவர், தாம் எப்போதுமே நூறு விழுக்காடு நேர்த்தியான பெண் என்று வாதிட்டது இல்லை எனச் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தம்மை தேர்வு செய்ததற்காக இயக்குநர் அனு மேனனுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும், கலைஞர்களின் முழுத் திறமையையும் வெளிக்கொண்டு வருவதில் அனு கெட்டிக்காரர் என்றும் கூறியுள்ளார்.
"இன்றைய நவீன உலகில் பெண்கள் சகுந்தலா தேவி போன்ற சாதனையாளர்களைப் போல் மிளிர முடியாவிட்டாலும் அவர்களது வாழ்க்கையில் இருந்து முக்கியமான அம்சங்களைத் தெரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
"ஒருவரது மனைவியாகவும் தாயாகவும் இருக்கும் அதே வேளையில் பெண்கள் தங்கள் சுயத்தை இழந்துவிடக் கூடாது.
"மேலும் தங்களது தனிப்பட்ட அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்பதும் முக்கியம்," என்கிறார் வித்யா பாலன்.

