சினிமாவில் சில தோல்விகளை எதிர்கொண்ட போதுதான் தனது பலம், பலவீனம் குறித்து பல விஷயங்கள் தெளிவாகப் புரிந்தது என்கிறார் விஷ்ணு விஷால்.
கோடம்பாக்கத்தில் தன்னை ஓரளவு நிலைநிறுத்திக்கொண்டதாக உணர முடிகிறது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த அஷ்வின் பல்வேறு பிரமுகர்களை பேட்டி கண்டு வருகிறார். அந்த வரிசையில் நடிகர் மாதவனை தொடர்ந்து விஷ்ணு விஷாலையும் பேட்டி கண்டுள்ளார்.
அதில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ள விஷ்ணு, கிரிக்கெட் மீதான தனது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் விவரித்துள்ளார்.
திரையுலகப் பயணம் என்பது சதுரங்க விளையாட்டுக்கு இணையானது என்றும் ஒவ்வொரு நகர்வையும் மிகக் கவனமாகவும் பொறுமையாகவும் எடுத்து வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"சினிமா உலகில் ஒருவர் நடித்த முதல் படம் வெற்றி என்றால் உடனே அதிர்ஷ்டம் என்பார்கள். இரண்டாவது, மூன்றாவது படங்களின்போது தான் வெற்றிக்குக் காரணம் திறமையா, உழைப்பா என்பது எல்லாம் தெரியவரும்.
"முதல் படம் 'வெண்ணிலா கபடி குழு' பெரியளவில் வெற்றி பெற்றது. ஆனால் அடுத்து நடித்த இரண்டு படங்களும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தன. இதுவரை நான் நடித்ததில் அவை இரண்டும்தான் படுதோல்விப் படங்கள் என்பேன்.
"இந்தத் தோல்விக்குப் பிறகான காலம்தான் என் வாழ்க்கையின் மிகக் கடினமான காலகட்டம். கிரிக்கெட்டும் இல்லை, நடிக்க வேண்டும் என்பதால் அதுவரை பார்த்து வந்த வேலையையும் விட்டுவிட்டேன். சினிமாவையும் கைவிட்டேன் என்றால் என்ன செய்வது என அதிகம் யோசித்தேன்," என்று விஷ்ணு விஷால் தான் எதிர்கொண்ட சிக்கல்களை விவரித்துள்ளார்.
தோல்விக்குப் பிறகுதான் சினிமாவில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாராம். அதன் பிறகுதான் தனது உண்மையான போராட்டம் தொடங்கியது என்கிறார்.
'நீர்ப்பறவை', 'குள்ளநரிக்கூட்டம்', 'முண்டாசுப்பட்டி', 'இன்று நேற்று நாளை', 'ஜீவா' என ஒவ்வொரு படத்திலும் சற்றே வித்தியாசமான கதைக்களங்களில் நடித்தது தம்மை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததாகச் சொல்கிறார்.
கதாநாயகன் என்பதற்காக தனக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதாக இல்லாமல், தன்னைச் சுற்றியுள்ள பத்து, பதினைந்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உறுதி செய்தாராம். இதுவும் தனது படங்கள் வெற்றிபெற முக்கிய காரணம் என்கிறார்.
"பின்னர் 'ராட்சசன்' படத்துக்கு முன்புதான் சினிமாவில் என்னை நிலைநிறுத்திக்கொண்ட உணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு நாயகனை முன்னிலைப்படுத்தும் கதைகளையும் தேர்வு செய்கிறேன். இனிமேல்தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர வேண்டும். இப்போது அதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்," என்கிறார் விஷ்ணு விஷால்.

