கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் குடும்பத்தில் பிறந்ததால், தமக்கு சிறு வயது முதலே நன்றாகப் படித்து பெயரெடுக்க வேண்டும் எனும் ஆசை இருந்ததாகச் சொல்கிறார் இளம் நாயகி ஐஸ்வர்யா மேனன்.
'தமிழ் படம் 2', 'நான் சிரித்தால்' என தமிழில் சில படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர், அடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.
இன்ஸ்டகிராம் பக்கத்தில் இவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்களை தரிசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் ஆவலுடன் காத்திருக்கிறது. கவர்ச்சியால் அந்தக் கூட்டத்தை கிறங்கடிக்கிறார் ஐஸ்வர்யா.
அடிப்படையில் இவர் பொறியியலாளராம். சொந்த ஊர் ஈரோடு. அங்குதான் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். சென்னையில் பட்டப்படிப்பை முடித்த கையோடு விளம்பரப் படங்களில் நடிக்கத் துவங்கினாராம்.
"வீட்டில் எல்லோருமே படிப்பாளிகள். அப்பா எம்பிஏ, அம்மா பிகாம், அண்ணன் மருத்துவர் என்று பெருமையாக சொல்லிக் கொள்வேன். எனக்கும் இயல்பாகவே படிப்பில் ஆர்வம் அதிகம்.
"நன்றாகப் படித்த காரணத்தால்தான் சினிமா ஆசை குறித்து வீட்டில் பேச முடிந்தது. விளம்பரப் படங்களில் நடித்த பிறகு சினிமாவிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது," என்கிறார் ஐஸ்வர்யா.
சினிமாவில் நடிக்கப் போவதாக இவர் சொன்னதும் பெற்றோரும் அண்ணனும் முதலில் அதிர்ச்சி அடைந்தனராம். காரணம் இவரது குடும்பத்துக்கும் சினிமா துறைக்கும் எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை என்பதுதான்.
"எங்களுக்குத் தெரிந்த யாரும் திரையுலகில் இல்லை. எனவே எப்படி எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று யோசித்தனர். பிறகு ஒருவழியாக அவர்களை சம்மதிக்க வைத்தேன்," என்று சொல்லும் ஐஸ்வர்யா, அதன் பிறகுதான் தமிழில் 'ஆப்பிள் பெண்ணே' படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் சரளமாகப் பேசுவதால் அந்த வாய்ப்பு கிடைத்ததாம். தற்போது தமிழ், கன்னடம், மலையாளம் என மும்மொழிகளில் கவனம் செலுத்துகிறார் ஐஸ்வர்யா.
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சிப் படங்களை வெளியிடுகிறீர்களே?
"ரசிகர்களுடன் கலந்துரையாடுவது மிகவும் பிடிக்கும். அவர்களும் அதை விரும்புகிறார்கள். கடந்த வாரம்கூட சேலை கட்டி எடுத்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
"பிறகு ஒரு காணொளித் தொகுப்பையும் வெளியிட்டேன்.
"அதற்கு நானே எதிர்பார்க்காத அளவுக்கு பாராட்டுகள் குவிந்தன. மகிழ்ச்சியும் உற்சாகமும் பிடிபடவில்லை," என்று துள்ளிக் குதிக்கும் ஐஸ்வர்யாவை இன்ஸ்டகிராமில் மட்டும் சுமார் பதினைந்து லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
ரசிகர்களின் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் கடமைப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுபவர், தொடர்ந்து கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவாராம்.
காதல், திருமணம் குறித்து?
"இதுவரை யாரையும் காதலித்தது இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் கல்லூரியில் படித்தபோதும் யாருமே என்னைக் காதலித்ததாகச் சொன்னதில்லை.
"என்னைப் பொறுத்தவரையில் வருங்கால வாழ்க்கை துணை குறித்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. நல்லவராக இருந்தால் அதுவே போதும்," எனப் பக்குவமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா.

